அரசன் ஆவாருன்னு பார்த்தா!.. ஆலமரத்தடியில உட்கார்ந்துருவாரு போல!.. சிம்புவின் புது ரூட்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆன்மிக பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், தற்போது நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து இரவு நேர படப்பிடிப்பால் தன்னுடைய நேரச்சுழர்ச்சி குழம்பிவிட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார் சிம்பு.
இந்நிலையில் தற்போது சிம்பு "வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்கு சென்று நமாஸ் செய்வேன். தினமும் இரண்டு வேளை தொழுவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கும் செல்வேன். இதுவரை 120-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளேன். ஒரு கட்டத்தில் நான் துக்கத்தின் உச்சத்தில் இருந்தேன். அந்த மனநிலையே என்னை இந்த ஆன்மிகப் பயணத்திற்குள் அழைத்துச் சென்றது. நீண்ட நாட்களாக மனதுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்த மாற்றம். நமக்குள் இருக்கும் விஷயங்களை முதலில் சரி செய்ய வேண்டும்; அதைத்தான் வெளியில் கொண்டு வர வேண்டும்" என கூறியுள்ளார்.
சிம்புவின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மத வேறுபாடுகளை தாண்டி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று மன அமைதியை தேடிய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்திருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்கள், மன அழுத்தங்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சிம்புவின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
