Categories: Cinema News latest news throwback stories

பாக்யராஜ் செஞ்சது என்னமோ நல்ல காரியம்தான்… ஆனா சிவாஜிக்குத்தான் சட்டுன்னு கோபம் வந்திருச்சு!! அப்படி என்ன நடந்துச்சு??

1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பாக்யராஜ், ராதிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தாவணி கனவுகள்”. இத்திரைப்படத்தை பாக்யராஜே இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Dhavani Kanavugal

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நீதிமன்றத்தில் நடப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார் பாக்யராஜ். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு கிராமத்தில் நடைபெற்றது. ஆதலால் பாக்யராஜ், அந்த ஊரிலேயே இருந்த நீதிமன்றம் ஒன்றை ஒரு நாள் படப்பிடிப்பிற்காக சிறப்பு அனுமதி கேட்டு படமாக்க முடிவு செய்தார். அதன்படி அந்த ஊரில் உள்ள நீதிமன்றத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கிடைத்துவிட்டது.

அதன் பின் நீதிமன்றத்தில் படமாக்க இருந்த காட்சிக்காக படக்குழுவினர் தயார் ஆனார்கள். அந்த காட்சியில் நடிக்க இருந்த சிவாஜி கணேசன் உள்ளே நுழைந்தபோது அந்த நீதிமன்றத்தை பார்த்து அசந்துவிட்டாராம். உடனே பாக்யராஜ்ஜை அழைத்து “எப்படி இந்த கிராமத்தில் இப்படி தத்ரூபமா நீதிமன்றம் மாதிரியே செட் அமைச்சிருக்க?” என்று கூறி பாராட்டினாராம்.

Dhavani Kanavugal

அதற்கு பாக்யராஜ், “செட் எல்லாம் கிடையாது. நிஜமாவே இது நீதிமன்றம்தான்” என கூறினாராம். “நிஜமாவே நீதிமன்றமா? என்னய்யா சொல்ற?” என சிவாஜி கணேசன் அதிர்ச்சியடைந்தாராம். “ஆமாம், இது நிஜமாகவே நீதிமன்றம்தான். இந்த ஒரு காட்சிக்காக எதற்கு சென்னை வரை போகவேண்டும் என்று நினைத்து இங்குள்ள நீதிமன்றத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிட்டேன்” என்று பாக்யராஜ் கூற சிவாஜிக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம்.

இதையும் படிங்க: டாப் நடிகையாக வளர்ந்ததினால் வருத்தத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… அப்படி என்னவா இருக்கும்!!

Dhavani Kanavugal

அங்கே நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை பார்த்து “இறங்குடா கீழே” என கத்தினாராம் சிவாஜி. அதன் பின் பாக்யராஜ்ஜை பார்த்து “என்னய்யா விளையாடுறியா. நீதிபதிங்குறது ஒரு கடவுள் மாதிரிடா. கடவுள் மாதிரியான ஆள் உட்கார்ர இடத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ட உட்கார வச்சிருக்க. இது ரொம்ப தப்பு. ஒரு நீதிமன்றம்ன்னா அதுக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. நீதிமன்றங்குறது ஒரு பாரம்பரியமான இடம்.” என்று கூறி தான் நடிக்க முடியாது என அந்த வளாகத்தை விட்டு வெளியே போய் விட்டாராம் சிவாஜி. அதன் பின் பாக்யராஜ், சிவாஜியிடம் கெஞ்சி அவரை சம்மதிக்க வைத்தாராம்.

Arun Prasad
Published by
Arun Prasad