Categories: Cinema News latest news throwback stories

இன்னொரு நடிகருக்கு பின்னணி குரல் கொடுத்த சிவாஜி கணேசன்… இது புதுசா இருக்கே!!

நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் “பராசக்தி” என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வெளியானது.

கலைஞரின் அனல் பறக்கும் வசனங்களும் சிவாஜியின் நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பகுத்தறிவு வசனங்கள் மக்களை உணர்ச்சிவசப்படுத்தியது.

Parasakthi

“பராசக்தி” திரைப்படம் தமிழ் நாட்டின் பல திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடியது. மக்கள் மிகவும் ஆரவாரமாக இத்திரைப்படத்தை வரவேற்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பகுத்தறிவு வசனங்களால் இத்திரைப்படத்திற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியது.

அக்காலகட்டத்தில் வெளியான பல பத்திரிக்கைகள் “பராசக்தி” திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆதலால் இத்திரைப்படம் விரைவில் தடை செய்யப்படும் என வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த வதந்தி அத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதாவது இத்திரைப்படம் விரைவில் தடை செய்யப்படும் என்ற வதந்தியை கேள்விப்பட்ட மக்கள், தடை செய்வதற்குள் இத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனராம்.

Parasakthi

இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் அடங்கிய “பராசக்தி” திரைப்படம், சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் திரைப்படம் என்றாலும், அதற்கு முன்பே சிவாஜி கணேசனின் குரல் மக்களுக்கு அறிமுகமாகியிருந்தது. ஆம்!

Nirdoshi

1951 ஆம் ஆண்டு ஹெச்.எம்.ரெட்டி என்ற பிரபல இயக்குனர், தெலுங்கில் “நிர்தோஷி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டது.

Sivaji Ganesan

இந்த நிலையில் அத்திரைப்படத்தில் நடித்திருந்த முக்காமாலா கிருஷ்ண மூர்த்தி என்பவருக்கு சிவாஜி கணேசன் தமிழில் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பின்னணி குரல் கொடுத்ததற்காக சிவாஜி கணேசன் ரூ.500 சம்பளமாக பெற்றாராம். இத்தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Published by
Arun Prasad