Categories: latest news

நடிகர் சூரி நடித்த முதல் படமே கவுண்டமணியுடன்தான்- அவரே கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகர்களில் சூரியும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பல நிராகரிப்புகளையும், அவமானங்களையும் கடந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

இதுவரை காமெடி நடிகராக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த சூரி தற்போது ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். அதுவும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில். ஆம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை என்ற படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும் நிலையில், சூரி அவரது கடந்த காலம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சூரி, “கதாநாயகன் அல்லது வில்லனாக நடிப்பதைவிட காமெடியனாக நடிக்கும் போது மட்டுமே எனது நடிப்பு இயற்கையாக இருக்கும்.

நான் 2000ஆம் ஆண்டில் சுந்தர் சி இயக்கிய கண்ணன் வருவான் படத்தில் கவுண்டமணி சாரோட தான் முதன் முதலில் நடித்தேன். அதன் பிறகு காதல், அஜித்தின் ஜி ஆகிய படங்களில் நடித்தேன். ஆனால் 2009ஆம் ஆண்டில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா சீன் தான் என்னை பிரபலமாக்கியது” என கூறியுள்ளார்.

ரஜினியை அடிச்சு தூக்கிய சிம்பு!… யுடியூப்பில் ‘மாநாடு’டிரெய்லர் செய்த சாதனை….

சூரி கூறிய பின்னர் தான் இந்த படங்களில் அவர் நடித்துள்ளதே நமக்கு தெரிகிறது. இதுவரை நாம் இதை எல்லாம் கவனித்திருக்கவே மாட்டோம். ஆனால் சூரி கூறியது போல் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா சீன் தான் அவருக்கென தமிழ் திரையுலகில் தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவரை சூரி என்று அழைத்ததை விட பரோட்டா சூரி என அழைத்தவர்கள் தான் அதிகம்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram