
latest news
TVK Vijay: கூட்டத்திலிருந்து இறந்தே வரும் உடல்கள்!.. கரூரில் நடந்தது என்ன?….
Vijay TVK Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று கரூருக்கு பரப்புரைக்காக சென்ற போது அங்கு கூட்டத்தில் சிக்கி பலபேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் வழியாக திருச்சி சென்று அங்கிருந்து காரில் நாமக்கல் வந்தார் விஜய். அதன்பின் பிரச்சார வேனில் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்றார்.
மதியம் 3 மணியளவில் அங்கு அவர் மக்களிடம் பேசினார். வழியெங்கும் அவரைக் காண தவெக தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் காத்திருந்தனர். நாமக்கல்லில் பேசிவிட்டு அங்கிருந்து கரூர் கிளம்பி சென்றார் விஜய். அங்கும் அவரை காணவும், அவரது உரையை கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர்.
இன்று மாலை 7 மணி அளவில் கரூரில் உள்ள வேலுச்சாமிபுரம் என்கிற பகுதியில் விஜய் பேசினார். விஜய் பார்ப்பதற்காக அங்கு பல்லாயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கம் அடைய ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு அந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூரில் விஜயின் உரையை கேட்க பல ஆயிரம் பேர் நின்று கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் அழுத்தம் அதிகரித்து, சுவாச குறைபாடு மற்றும் காற்றோட்டமிண்மை காரணமாக 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்திருக்கிறார்கள். அதில்தான் 30 பேர் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி தகவல் என்னவெனில் கூட்டத்திலிருந்து மருத்துவமனைக்கு வந்தபோது 29 பேர் இறந்த நிலையில்தான் வந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருக்கிறார்.
இவர்கள் பிரச்சார கூட்டத்திலேயே மரணமடைந்து விட்டனர். மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இன்னும் சடலம் வரலாம் என்கிற அச்சத்தில் இருக்கிறோம் என அவர் கூறியிருக்கிறார்.