தரம் தாழ்ந்து பேசும் உதயநிதி ஸ்டாலின் - வலுக்கும் கண்டனங்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுக இளைஞரணி செயலாளரும் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் தொடர்ந்து பல இடங்களிலும் தரம் தாழ்ந்து பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவை அவர் கடுமையாகவும், ஏளனமாகவும் பேசி வருகிறார்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை தொடர்புபடுத்தி மிகவும் அருவருக்கத்தக்க கருத்தை அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பல பெண்கள் அமைப்புகளும், பெண் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து வருகின்றனர்.
ஏற்கனவே திமுக மூத்த நிர்வாகிகளை உதயநிதி ஸ்டாலின் மதிப்பதில்லை எனவும், அவரை ஸ்டாலின் அடக்கி வைக்காமல் வேடிக்கை பார்ப்பதாக திமுகவிலேயே புகைச்சல் இருந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ஆதரவை பெறுபவர்களுக்கே பதவி என்கிற நிலை உருவாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சை கண்டித்துள்ள டிடிவி தினகரன் ‘பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி’ என்றும்,
‘நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி’ எனவும் பதிவிட்டுள்ளார்.
அனைத்து பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதியை கண்டிப்பாரா இல்லை வேடிக்கை பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.