Categories: Cinema News latest news

காலையில் சேலம், மாலையில் சென்னை… வெறித்தனமாய் நடித்த விஜயகாந்த்… இப்படி ஒரு நடிகரா??

புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் பெருந்தன்மை குறித்து நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். உதவி என்று தேடி வருபவர்களுக்கு உதவுவது மட்டுமல்ல, சினிமாத்துறையிலும் தனது பெருந்தன்மையை கடைப்பிடிப்பவர் விஜயகாந்த்.

குறிப்பாக ஒரு படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, விஜயகாந்த் கொடுக்கும் ஒத்துழைப்பை குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு திரைப்படம் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக விஜயகாந்த் செய்த வியக்கத்தக்க செயல் குறித்து பார்க்கலாம்.

Vijayakanth

1981 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த “எர்ரா மல்லி” என்ற திரைப்படத்தை “சிவப்பு மல்லி” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்ய ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இத்திரைப்படத்திற்காக முதலில் கமல்ஹாசனை அணுகியது நிறுவனம். ஆனால் கால்ஷீட் காரணமாக கமல்ஹாசனால் நடிக்க முடியவில்லை.

அதன் பின் விஜய்காந்த்தை சென்று சந்தித்தார் ஏவிஎம் சரவணன். ஆனால் விஜயகாந்த் அப்போது சேலத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரிக்கும் “சாட்சி” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் ஏவிஎம் தயாரிக்கும் திரைப்படம் என்பதால் “சிவப்பு மல்லி” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.

SivappuMalli

“சிவப்பு மல்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கியது. ஆகஸ்து 15 ஆம் தேதி இத்திரைப்படத்தை வெளியிட வேண்டும் என ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆதலால் மிகவும் மும்முரமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற தொடங்கியது.

Vijayakanth

தயாரிப்பு நிறுவனம் சொன்ன தேதிக்குள் இத்திரைப்படத்தில் நடித்து முடித்து கொடுக்க வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த், தினமும் காலையில் சேலத்தில் “சாட்சி” படத்தில் நடித்துவிட்டு மாலை 6 மணிக்கு கிளம்பி சென்னை வந்து, அடுத்த நாள் அதிகாலை வரை ஏவிஎம்மின் “சிவப்பு மல்லி” படத்தில் நடித்துவிட்டு மீண்டும் சேலத்திற்கு கிளம்பிவிடுவாராம். படப்பிடிப்பு முடியும் வரை இவ்வாறுதான் நடித்துக்கொடுத்தாராம் விஜயகாந்த். இத்தகவலை கேள்விப்படும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Published by
Arun Prasad