"சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நற்பணி இயக்கம்"
நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற சூர்யா நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகி ஒருவர் "சூர்யா மக்கள் தலைவராவார்" என்று பேசியது சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளானது. இதையடுத்து, சூர்யா விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாக பல்வேறு வதந்திகளும் பரவின.

இந்த நிலையில், சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அவர் தொடர்ந்து அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலம் மட்டுமே மக்களுக்கு சேவை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பரவி வரும் அரசியல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆதாரமற்ற தகவல்களை பரப்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்களும் ரசிகர்களும் நம்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளக்க அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, சூர்யாவின் அரசியல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
