சமீபத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு திமுகவே முக்கியக் காரணம் என்ற தொனியில் பேசினார் பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் மத்தியில் நிலவி வந்த விவாதங்களை இந்தப் பேச்சு மீண்டும் கிளறிவிட்டது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசியல் களம் மட்டுமின்றி திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விமர்சகர்களும் இதற்குத் தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஒரு அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த், காலம் பதில் சொல்லும் என்று ஒற்றை வரியில் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா, உடனடியாக தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்தும், ரஜினியின் அரசியல் விலகல் பின்னணி குறித்தும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்த லதா ரஜினிகாந்த், நோ கமெண்ட்ஸ் என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். இந்த விவகாரம் குறித்து ரஜினியே அது உண்மையில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் கொடுத்த ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் முழுமையாகப் படித்தாலே அனைத்து விஷயங்களும் உங்களுக்குப் புரியும் என்றார்.





