சினிமாவே வேணாம்னு கதறி அழுதேன்!.. பராசக்தி பட இயக்குனரின் சோக பிளாஷ்பேக்!..

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதிலும் படம் இயக்கும் வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்துவிடாது. பெரிய இயக்குனர்களின் படங்களில் வேலை செய்ய வேண்டும். அதன்பின் ஒரு கதையை உருவாக்கி நடிகர்களை சம்மதிக்க வைத்து படத்தை இயக்க வேண்டும். அப்படி இயக்கும் படம் ஹிட் அடிக்க வேண்டும். படம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதல் படம் தோல்வி என்றால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.
இதனால், பல இயக்குனர்கள் ஒரு படத்தோடு சினிமாவை விட்டே போயிருக்கிறார்கள். ஆனால், சில இயக்குனர்கள் முதல் படம் தோல்வி கொடுத்தும் பல முயற்சிகள் செய்து 2வது படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அதன்பின் பெரிய இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அப்படி வந்த ஒருவர்தான் சுதா கொங்கரா.
ஆந்திராவை சேர்ந்த இவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இவர் இயக்கிய முதல் திரைப்படம் துரோகி. இந்த படத்தில் ஸ்ரீகாந்தும், விஷ்ணு விஷாலும் நடித்திருந்தனர். படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் இப்படம் தோல்வி அடைந்துவிட்டது.

அதன்பின் 6 வருடங்கள் கழித்து சுதா கொங்கரா இயக்கிய படம்தான் இறுதிச்சுற்று. மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்கிய படம்தான் சூரரைப் போற்று.
ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் சுதா கொங்கரா. ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் பேசிய சுதா கொங்கரா ‘என்னுடைய முதல் படம் எடுக்கும்போதே பல பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு டார்ச்சராக இருக்கிறது. இந்த படத்திலிருந்து வெளியேற நினைக்கிறேன் என மணி சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதற்கு 4 பக்கங்கள் டைப் பண்ணி பதிலாக அனுப்பியிருந்தார் மணி சார். என்ன நடந்தாலும் இந்த படத்தை நீ முடிக்க வேண்டும் என சொன்னார்.
துரோகி படம் வெளியாகி தோல்வி அடைந்துவிட்டது. அதன்பின்னர் மணி சாரின் அலுவலகத்திற்கு சென்று ‘எனக்கு சினிமாவே வேண்டாம் சார். நான் வேறு எதாவது வேலை செய்யப்போகிறேன்’ என சொல்லி அழுதேன். அதற்கு அவர் ‘முதல் 3 படங்கள் தோல்வியை கொடுத்த ஒருவர் முன்புதான் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்’ என சொல்லி அறிவுரையும், நம்பிக்கையும் கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.