Cinema News
முதல் படமே ஃப்ளாப்… எப்படியாவது வாய்ப்பு வாங்கி கொடுங்களேன்… புலம்பித் தள்ளிய ரஜினி பட இயக்குனர்… இவரா இப்படி!
தற்போது பல திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி வரும் மனோபாலா, ஒரு காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த்தை வைத்து “ஊர்க்காவலன்” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தனது முதல் திரைப்படமே தோல்வி அடைந்த விரக்தியில் தனது நண்பர் சித்ரா லட்சுமணனிடம் வாய்ப்பு கேட்டு எழுதிய கடிதம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
1982 ஆம் ஆண்டு கார்த்திக், சுஹாசினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆகாய கங்கை”. இத்திரைப்படம்தான் மனோபாலா இயக்கிய முதல் திரைப்படம். ஆனால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அவ்வளவாக வரவேற்பு இல்லை. தனது முதல் திரைப்படமே தோல்வியை தழுவியதால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானாராம் மனோபாலா.
அந்த மன உலைச்சலில் தனது நண்பரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனுக்கு ஒரு கடிதம் எழுதினாராம் மனோபாலா. அதில் தனது மனக்குமுறலை எல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எனக்கு திறமை இல்லையா? நான் நல்ல டைரக்டர் இல்லையா? ஏன் எனக்கு வாய்ப்புகள் அமையமாட்டிக்கிறது? நீங்கள்தான் எனக்கு எப்படியாவது உதவ வேண்டும். சினிமாவில் உங்களுக்கு தெரியாத ஆட்களே இல்லை. எனக்கு எப்படியாவது உதவுங்கள்” என அந்த கடிதத்தில் எழுதியிருந்தாராம்.
அதன் பின் ஒரு நாள் மனோபாலாவை நேரில் சந்தித்த சித்ரா லட்சுமணன், “நீ எதற்கும் கவலைப்படாத மனோபாலா. உன்னுடைய திறமைக்கு நிச்சயம் நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று ஆறுதல் கூறினாராம்.
அதனை தொடர்ந்து கதாசிரியர் கலைமணியின் மூலம் “பிள்ளை நிலா” என்ற திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்ததாம். அத்திரைப்படம் மனோபாலாவுக்கு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்திருக்கிறது. அதன்பின் பல வெற்றித் திரைப்படங்களை மனோபாலா கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.