அப்பாவோட ஃபிரண்ட்ஸே எனக்கு உதவல!.. மயில்சாமியின் மகன் ஆதங்கம்!..

சினிமாவில் நிறைய சம்பாதிக்கும் நடிகர்களில் வெகு சிலர் மட்டுமே கஷ்டப்படும் சிலருக்கு உதவி செய்வார்கள். அப்படி செய்யப்படும் உதவிகளால் அவர்கள் பலராலும் நினைவு கூறப்படுவார்கள். எம்.ஜி.ஆரை மக்கள் வள்ளல் என அழைக்க காரணம் அவர் எல்லோருக்கும் செய்த உதவிதான். சினிமாவில் சம்பாதித்ததில் 80 சதவீதம் அவர் ஏழை மக்களுக்கே கொடுத்துவிட்டார்.
அதேபோல்தான் விஜயகாந்தும். மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே களம் இறங்விடுவார். பசியோடு இறப்பவர்களுக்கு சாப்பாடு போடுவது, நிறைய பேரை படிக்க வைத்தது என பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். ஒரு மனிதராகவே அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதனால்தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் அத்தனை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.
அதேபோல், சத்தியராஜ், அஜித், விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்போதும் பலருக்கும் உதவியிருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே இது வெளியே தெரியவரும். அப்படி பலருக்கும் உதவி செய்தவர்தான் மறைந்த நடிகர் மயில்சாமி. இத்தனைக்கும் அவர் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரோ இல்லை. ஒரு சாதாரண காமெடி நடிகர்தான். 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வர மட்டுமே சம்பளம் வாங்குவார்.

அதிக காட்சிகள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சில லட்சங்கள் கிடைக்கும். அப்படி வாங்கும் பணத்தையும் கஷ்டப்படும் ஏழை கலைஞர்களுக்கு பிரித்து கொடுத்துவிடுவார். எந்த நடிகரின் மகன், மகள் படிப்புக்கு பணம் தேவை, வாடகை கட்ட முடியவில்லை, மருத்துவ வசதி என பல பிரச்சனைகளுக்கு பணம் தேவை எனில் உடனே சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களிடம் சொல்லி கேட்டு வாங்கி கொடுப்பார். இப்படி பல வருடங்கள் பலருக்கும் உதவி இருக்கிறார்.
2 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் இறந்த போது அவரின் மரணத்திற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மயில்சாமி அவ்வளவு உதவி செய்திருக்கிறார் என்பது அவர் இறந்த பின்னரே பலருக்கும் தெரியவந்தது.
மயில்சாமியின் மகன் அன்பு. சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள எமன் கட்டளை என்கிற படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான புரமோஷன் விழாவில் பேசிய அவர் ‘என் அப்பா வசதி இல்லாத பலருக்கும் உதவினார். அவரின் மறைவுக்கு பின் சினிமாவில் நடிக்க பல இடங்களில் நான் வாய்ப்பு தேடி அலைந்தேன். என் அப்பாவின் நண்பர்களே எனக்கு உதவவில்லை. நானே தனியாக முயற்சி செய்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.