எம்.ஜி.ஆர் கதையே கேட்காமல் நடித்த ஒரே திரைப்படம்!.. அதுவும் அவருக்காகத்தானாம்!...

திரையுலகை கட்டி ஆண்ட மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் நுழைந்தவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ‘ராஜகுமாரி’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக மாறினார். எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்ட காலம் அது.

mgr
எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பார். முதலில் கதை, திரைக்கதை, அடுத்து யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் இசை.. பாடல் வரிகள் என்ன.. அதை எப்படி படம் பிடிக்க வேண்டும் என எல்லா விசயங்களிலும் கவனமாக இருப்பார். எம்.ஜி.ஆர் என்ன மாறுதல் சொன்னாலும் இயக்குனர்கள் கேட்பார்கள். அதேபோல், படத்தில் தான் பேசும் வசனத்திலும், பாட்டு வரியிலும் கூட தவறான கருத்துக்கள் வந்துவிடக்கூடாது என யோசிப்பவர்.

mgr
அதேநேரம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் கதையே கேட்காமல் ஒரு படத்தில் நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால் ஒரு படத்தில் அது நடந்தது. ஏவிஎம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா. இப்படத்தை திருலோகசந்தர் இயக்கினார். சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர்.

anbe
come september என்கிற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படத்தில் ரம்மியான பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு, வழக்கமான எம்.ஜி.ஆர் பட பாணியில் இந்த படம் இருக்காது. இறுதிக்காட்சியில் சண்டை இல்லாமல் முடிந்த எம்.ஜி.ஆர் திரைப்படம் ‘அன்பே வா’ மட்டுமே. இந்த படம் 1966ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்தது.

Anbe Vaa
இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்து ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் காண்பித்து சம்மதம் பெற்ற திருலோகசந்தர் அடுத்து எம்.ஜி.ஆரிடம் வந்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ ‘செட்டியார் பார்த்துவிட்டால் போதும். நான் பார்க்க தேவையில்லை. அதை அப்படியே எடுங்கள்.. எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்’ என சொன்னாராம்.
அந்த அளவுக்கு மெய்யப்பட்ட செட்டியார் மீது மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது