Categories: Cinema History Cinema News latest news Uncategorized

நாடோடி மன்னன் படம் பார்க்க ரசிகர்கள் செய்த விபரீத செயல்!.. அதிர்ந்து போன எம்.ஜி.ஆர்!..

திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர் என எல்லோராலும் அழைப்படும் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். துவக்கம் முதலே சண்டை காட்சிகளில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தவர். திரையில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்லியும், பாடியும் அறிவுரை செய்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதனால்தான், எம்.ஜி.ஆர் அரசியலில் இருந்த போது மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தபோது கூட படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றி பெற்றார்.

அந்த அளவுக்கு மக்களின் அபிமானத்தையும், ஆதரவையும் அவர் பெற்றிருந்தார். அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களே அவரின் பெரிய பலமாக இருந்தனர். அவர் செல்லுமிடமெங்கும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள். அதோடு, எம்.ஜி.ஆர் வசித்து வந்த இராமாபுரம் தோட்டத்தில் தினமும் அவரை காண மக்களின் கூட்டம் அலை மோதும், அங்கு வரும் அனைவருக்கும் உணவு அளித்து உபசரித்து எம்.ஜி.ஆர் அனுப்புவார். மேலும், தன்னால் முடிந்த உதவிகளை பிறர்களுக்கு செய்து கொண்டே இருப்பார். அதனால்தான் அவரை வள்ளல் என மக்கள் அழைத்தனர்.

எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் நாடோடி மன்னன். இப்படம் 1958ம் ஆண்டு வெளியானது. தன்னிடம் இருந்த சொத்துக்களை விற்று இப்படத்தை எடுத்தார் எம்.ஜி.ஆர். சில லட்சங்களில் உருவான இந்த திரைப்படம் ரூ.1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், ஒரு விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.

போடிநாயக்கன் பட்டியிலிருந்த ஒரு மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் எம்.ஜி.ஆரின் குடும்ப மருத்துவரை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தினமும் இங்கு வந்து தங்களின் ரத்தத்தை தானமாக கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் நாடோடி மன்னன் படத்தை பார்த்து வருகிறார்கள் என சொல்ல, இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது. இதைக்கேட்டு பதறிப்போன எம்.ஜி.ஆர் அடுத்தநாளே போடி நாயக்கனூரில் ரசிகர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அதில், இனிமேல் யாரும் ரத்தத்தை கொடுத்து படம் பார்க்கும் விபரீத செயலை செய்யக்கூடாது என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார். மேலும், வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது எனவும் அறிவுரை செய்தார்.

ரசிகர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் பலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் மீது அக்கறை கொண்ட மனிதராக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா