Cinema History
காஷ்மீரில் கடன் வாங்கி உதவி செய்த எம்.ஜி.ஆர்!.. அட இது செம மேட்டரு!..
எம்.ஜி.ஆர் எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்பவர். ஏனெனில் சிறு வயது முதலே வாழ்க்கையில் வறுமைகளை பார்த்தவர். யாரேனும் தனக்கு உதவமாட்டார்களா என ஏங்கியவர். திரையுலகில் அவமானங்களை சந்தித்துதான் நடிகராக மாறினார். நாடகத்தில் இருந்து சினிமாவில் நுழைந்து பல தடைக்கற்களை தாண்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
எம்.ஜி.ஆர் பலருக்கும் பல வழிகளில் உதவிகளை செய்துள்ளார். ஏழை மக்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார். தன்னிடம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது அவர் உதவிகளை செய்தவர். ஏனெனில் உண்பது, உறங்குவது போல் கொடுப்பதும் அவருக்கு இயல்பான ஒன்று. இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் காஷ்மீரில் நடந்த ஒரு சம்பத்தை இங்கே பார்க்க போகிறோம்.
இதயவீணை படத்தின் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர் காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அதை கேள்விப்பட்ட ராணுவத்தினர் அவரை சந்தித்து வரவேற்றனர். மேலும் ராணுவ சங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அங்கு செல்ல முடிவெடுத்த எம்.ஜி.ஆர் ராணுவ சங்கத்திற்கு நிதி கொடுக்க முடிவெடுத்தார்.
அப்போது அவர் பணம் எதுவும் எடுத்துசெல்லவில்லை. தயாரிப்பு நிர்வாகியிடம் படப்பிடிப்புக்கு தேவையான பணம் மட்டுமே இருந்தது. எனவே, அங்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரை தொடர்புகொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி ‘கடனாக கிடைக்குமா’ என கேட்டுள்ளார். எம்.ஜி.ஆர் கேட்டதும் ‘கண்டிப்பாக தருகிறேன். ஆனால், எதற்கு?’ என அவர் கேட்க எம்.ஜி.ஆர் விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
அதைக்கேட்ட அந்த தொழிலதிபர் ‘சிறிய தொகையை கொடுக்கலாம். இவ்வளவு அதிகமாக கொடுக்க வேண்டுமா?’ என கேட்க, கோபமடைந்த எம்.ஜி.ஆர் ‘நீங்கள் நானும் நிம்மதியாக இங்கே வாழ்கிறோம் எனில் அது ராணுவ வீரர்கள் எல்லையில் காவல் காப்பதால்தான்’ என சொன்னாரம். அதேபோல், அவரின் கடன் வாங்கிய பெரும் தொகையை ராணுவ சங்கத்திடம் எம்.ஜி.ஆர் கொடுக்க அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.