காத்திருந்த ரசிகருக்காக கண்ணீர் சிந்திய எம்.ஜி.ஆர்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!…

by சிவா |   ( Updated:2025-05-02 03:36:14  )
MGR
X

MGR

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1971ம் வருடம் வெளியான திரைப்படம் ரிக்‌ஷாக்காரன். எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கியிருந்த இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மஞ்சுளா நடித்திருந்தார். மேலும், அசோகன், சோ, ஆர்.ஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக நடித்திருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், அழகிய தமிழ் மகள் இவள் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல்கள் இப்போதும் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடித்ததற்கு எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. சிவாஜிக்கு தேசிய விருது கொடுக்காத நிலையில் இந்த படத்திற்காக எம்.ஜி.ஆர் விருது வாங்கினார். அப்போது இது விமர்சனத்திற்கும் உள்ளானது. எம்.ஜி.ஆருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தார்கள்.

அதிலும் அடித்தட்டு மக்கள் அவருக்கு அதிகளவில் ரசிகர்களாக இருந்தார்கள். ரிக்‌ஷாகாரன் மெகா வெற்றியை சென்னை ரிக்‌ஷாகாரர் சங்கம் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கே சென்று கொண்டாடியது. அப்போது கூட்டத்தில் இருந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் ’இன்னும் 10 நாட்களில் எனது திருமணம். நீங்கள்தான் வந்து தாலி எடுத்து கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும்’ என அன்பு கட்டளை இட்டார். எம்.ஜி.ஆரும் கண்டிப்பாக வருகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டார்.

ஒருநாள் ஷூட்டிங்கில் மேக்கப் போட்டு கொண்டிருந்தபோது திடீரென அந்த ரசிகர் சொன்னது எம்.ஜி.ஆருக்கு நினைவுக்கு வந்தது. இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும் என நினைத்து எம்.ஜி.ஆர் அங்கே சென்றார். ஆனால், அந்த ரசிகரோ தாலியை கட்டாமல் எம்.ஜி.ஆருக்காக காத்திருந்தார்.

எம்.ஜி.ஆரை கண்டதும் துள்ளிக்குதித்த அந்த ரசிகர் ‘ஒரு சாதாரண ரிக்‌ஷாகாரர் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வராமாட்டார் என சொன்னீங்களே. பாத்தீங்களா வந்துவிட்டார். இவர்தான் என் தலைவர்’ என அங்கிருந்து எல்லோரிடமும் சந்தோஷப்பட்டு சொல்ல எம்.ஜி.ஆருக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. அதன்பின் அவர் தாலி எடுத்து கொடுத்து ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்தார். அதோடு, அந்த ரசிகருக்கு 10 ஆயிரம் பணத்தையும் அன்பளிப்பாக கொடுத்துவிட்டு வந்தார்.

Next Story