Cinema History
ஒரே படம்தான்… தப்பா பேசுன வாயெல்லாம் குளோஸ்… எம்.ஜி.ஆர் செய்த துணிகர காரியம்…
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தொடக்க காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் பல வரலாற்றுத் திரைப்படங்களிலேயே நடித்தார். “மந்திரிக்குமாரி”, “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “நாடோடி மன்னன்”, “பாக்தாத் திருடன்”, “அரசிளங்குமாரி” ஆகிய திரைப்படங்களை உதாரணங்களாக கூறலாம்.
இடைப்பட்ட காலத்தில் சில சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தாலும் அத்திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. ஆதலால் எம்.ஜி.ஆருக்கு சமூக திரைப்படங்களில் நடிப்பதற்கு தயக்கம் இருந்தது. எனினும் ஒரு காலகட்டத்தில் சமூகத் திரைப்படங்களில் நடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்படி அவர் துணிகரமாக நடித்த சமூகத் திரைப்படம்தான் “தாய் சொல்லை தட்டாதே”. இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். எம்.ஏ.திருமுகம் இத்திரைப்படத்தை இயக்க, சாண்டோ சின்னப்பா தேவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“தாய் சொல்லை தட்டாதே” என்ற திரைப்படத்தில் அவர் நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் மீது சில விமர்சனங்கள் இருந்தனவாம். அதாவது எம்.ஜி.ஆர் சீக்கிரமாக திரைப்படத்தை முடிக்க மாட்டார் எனவும் எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் நடித்தால் ஓடாது எனவும் பல பேச்சுக்கள் இருந்தன. இந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கினாராம் எம்.ஜி.ஆர். அதாவது “தாய் சொல்லைத் தட்டாதே” திரைப்படத்தை மிக விரைவில் முடித்துக்கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். அதே போல் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதாம்.
இத்திரைப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆர் குறித்து விமர்சித்த பலரின் வாய்களை எல்லாம் மூடியதால் இத்திரைப்படத்தின் வெற்றியை எம்.ஜி.ஆர் மிகச் சிறப்பாக கொண்டாடினாராம். அதற்கு முன்பு வரை எம்.ஜி.ஆர் நடித்த எந்த சமூகத் திரைப்படங்களும் வெற்றிபெறவில்லை என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாராம் எம்.ஜி.ஆர்.
ஆதலால் இத்திரைப்படத்தின் இயக்குனரான எம்.ஏ.திருமுகம், இத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவியரசர் கண்ணதாசன், இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தாராம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்ததற்கு முக்கிய காரணம் அவரது சமூகப் படங்கள்தான். அதற்கு வித்திட்ட படமாக “தாய் சொல்லைத் தட்டாதே” திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகரின் கன்னத்தை பதம் பார்க்கச் சொன்ன மாரி செல்வராஜ்… இவ்வளவு ஸ்டிரிக்ட்டாவா இருக்கிறது!