நாடோடி மன்னன் படம் எம்ஜிஆருக்கு எவ்வளவு பெரிய பேரும், புகழையும், வெற்றியையும் தந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப் படம் ஓடினால் நான் நாடோடி. இல்லையேல் மன்னன் என்ற எம்ஜிஆரின் வாக்கு அப்படியே பலித்தது. படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கினார் எம்ஜிஆர். படத்தில் இரு வேடங்கள் ஏற்று நடித்த எம்ஜிஆரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை முதலில் ஒரு இயக்குனருக்குக் கொடுத்தார். ஆனால் அவரோ மிஸ் பண்ணி விட்டார். ஏன்? என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா…
தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று இன்று வரை போற்றிக் கொண்டு இருக்கிற கே.சுப்பிரமணியம் என்ற இயக்குனர் இயக்கிய முதல் திரைப்படம் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த பவளக்கொடி. இது 1934ல் வெளியானது. பல வெற்றிப்படங்களைத் தந்த அவர் இயக்கிய கடைசி படமாக பாண்டித்தேவன் அமைந்தது. எம்ஜி.சக்கரபாணி, டிகே.பகவதி, டிகே.பாலசந்தர், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, பிஎஸ்.சரோஜா, ராஜசுலோசனா, டிஏ.மதுரம் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படத்தின் தலைப்புதான் என்று சொல்லப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பாண்டித்தேவனின் தோல்விக்கு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற நட்சத்திரங்களின் அலை அந்தக் காலகட்டத்தில் பலமாக வீசியதும் ஒரு முக்கியமான காரணம் என்பது அன்றைய திரைப்பட ஆர்வலர்கள் பலரின் கருத்தாக இருந்தது.
பாண்டித்தேவன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இனி திரைப்படங்களை இயக்குவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார் கே.சுப்பிரமணியம். அந்தக் காரணத்தினால் தான் நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் அவரை இயக்கச் சொல்லி வாய்ப்பு கொடுத்தும் அவர் அதை ஏற்கவில்லையாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.





