பாதி படம் முடிந்தபோது ஏற்பட்ட விபத்து.. ஆனாலும் தயாரிப்பாளரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்..

தயாரிப்பாளர்களின் நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் நடிக்கும் படங்களால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது அதேபோல் நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். அதிக செலவு வைக்காமல் குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுப்பார். அதனால்தான் அவரை வைத்து படமெடுக்க அப்போது தயாரிப்பாளர்கள் போட்டோ போட்டி போட்டனர். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் நல்ல லாபத்தை பார்த்துவிடலாம் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கணக்காக இருந்தது.

mgr1
எம்.ஜி.ஆரின் நடிப்பில் 1961ம் வருடம் வெளிவந்த திரைப்படம் திருடாதே. இப்படத்தை பா.நீலகண்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்துகொண்டிருந்தபோது அவருக்கு ஒரு விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. எனவே, அவரால் சில மாதங்கள் நடக்கமுடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அப்போது அவரை பார்க்க திருடாதே படத்தின் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை வந்திருந்தார். மருத்துவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் ‘இவர் எழுந்து நடக்க இன்னும் பல மாதங்கள் ஆகுமா?’ என கேட்டுவிட்டு எதையோ யோசித்தபடி குழப்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவரின் முகத்தை பார்த்து அவர் என்ன நினைத்திருப்பார் என்பதை எம்.ஜி.ஆர் புரிந்து கொண்டார். அவரை பற்றி விசாரித்ததில் பெரிய தொகையை வட்டிக்கு வாங்கியே அவர் அந்த படத்தை எடுத்துவந்தது தெரியவந்தது. பல மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையெனில் வட்டி தொகை அதிகமாகி கடன் சுமையில் மாட்டிக்கொள்வார் என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அவரை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்தார்.

mgr1
அதன்படி சொந்த முதலீடு வைத்திருந்த ஏ.எல்.சீனிவாசன் என்பவரிடம் பாதி எடுக்கப்பட்ட திருடாதே படத்தை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்து சின்ன அண்ணாமலையை காப்பாற்றினார். திருடாதே திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.