பிரபல இயக்குனரின் சைக்கிளை திருடிய எம்.ஜி.ஆர்…?? புரட்சித் தலைவரின் வாழ்க்கையையே மாற்றிய சம்பவம் இதுதான்…

MGR
எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் புரட்சித் தலைவராக, தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வராக விளங்கினாலும் அவரது சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் எண்ணிலடங்கா தடைகளை தாண்டி வந்தவர் அவர். சினிமாவில் நுழைந்த போது பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர், தான் நடித்த முதல் திரைப்படமான “சதிலீலாவதி” திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருந்தார். அக்கதாப்பாத்திரத்தின் பின்னணியில் நடந்த சுவாரஸ்யமான கதையை இயக்குனரும் நடிகருமான மனோ பாலா தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

MGR
தமிழின் பழம்பெரும் இயக்குர்களாக திகழ்ந்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. இருவரும் இணைந்து தமிழில் பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். இதில் கிருஷ்ணன் இயக்குனர் ஆவதற்கு முன்பு ஒரு திரைப்பட நிறுவனத்தில் லேப் டெக்னீஷீயனாக வேலை செய்து வந்தாராம். அப்போது ஒரு நாள் தனது பணியை முடித்து விட்டு வெளியே வந்தபோது அவரது சைக்கிள் காணாமல் போயிருக்கிறது. அந்த காலத்தில் மிகவும் விலை உயர்ந்த சைக்கிளை அவர் வைத்திருந்தாராம்.
காணாமல் போன தனது சைக்கிளை குறித்து அருகில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது “இங்கே அருகில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே இருந்த ஒரு ஆள், சில மணி நேரங்களுக்கு முன்பு வந்து உங்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனார்” என அவர் கூறியுள்ளார்.

Krishnan-Panju
உடனே அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த படப்பிடிப்புத் தளத்திற்கு விரைந்தாராம் கிருஷ்ணன். அங்கு நடந்துகொண்டிருந்தது “சதிலீலாவதி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகும்.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த கிருஷ்ணன், போலீஸ் வேடம் அணிந்திருந்த ஒரு ஒல்லியான நபர் தன்னுடைய சைக்கிளை வைத்திருப்பதை பார்த்தார். அந்த வேடத்திற்கு சைக்கிள் மிகவும் முக்கியமான ஒன்று.
படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதை கூட கவனியாமல், கத்திக்கொண்டு அந்த நபரிடம் சென்றாராம் கிருஷ்ணன். உடனே அத்திரைப்படத்தின் இயக்குனர் எல்லீஸ்.ஆர்.டங்கன் கிருஷ்ணனை அப்புறப்படுத்த ஆள் அனுப்பினாராம்.

MGR in Sathileelavathi
அப்போது எடுக்கப்படுக்கொண்டிருந்த காட்சி முடியும் வரை கிருஷ்ணன் அங்கேயே இருந்திருக்கிறார். அக்காட்சி முடிந்தவுடன் சைக்கிளை வைத்திருந்த நபர் கிருஷ்ணனிடம் வந்து “ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் சைக்கிளை நான் எடுத்து வந்தது தவறுதான். ஆனால் இந்த படத்தில் எனக்கு இரண்டே இரண்டு காட்சிகளில்தான் நடிக்க வாய்ப்புக்கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கதவை திறந்து வைக்கப்போவதாக நான் எண்ணுகிறேன்.
ஆதலால் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.இன்று நான் இடம்பெறும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டப் பிறகு உங்களிடமே வந்து சைக்கிளை கொடுத்துவிடுகிறேன்” என கெஞ்சினாராம்.

MGR
இதனை கேட்டு மனம் உருகிய கிருஷ்ணன் சரி என்று தலையாட்டினார். அப்படி அவரிடம் கெஞ்சிய நடிகர்தான் எம்.ஜி.ஆர். பின்னாளில் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இணைந்து எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.