“எம் ஜி ஆர் என்னோட தோஸ்த்.. அதனால் தான் சுட்டேன்”.. ஓப்பனாக அறிவித்த எம் ஆர் ராதா.. நடிகவேல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..

தனது அசாத்தியமான நடிப்பால் நடிகவேல் என பட்டம் பெற்ற எம் ஆர் ராதா, தொடக்கத்தில் நாடக்த்துறையில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து 1930 களில் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். “சந்தன தேவன்”, “சத்தியவாணி” என பல திரைப்படங்களில் நடித்த இவர், “ரத்த கண்ணீர்” என்ற திரைப்படம் மூலம் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் ஒன்றை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

சிறந்த நடிகர் மட்டுமல்லாது அக்காலத்தில் மிகப்புகழ் பெற்ற திராவிட சித்தாந்த கொள்கையில் முன்னணி பிரச்சாகரராகவும் திகழ்ந்தவர். தனது திரைப்படங்களிலும் பொது வெளியிலும் மிகவும் துணிச்சலாக சமூக நீதி கருத்துகளை அள்ளி தெளித்தவர் எம் ஆர் ராதா. பெரியார், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என பலருடனும் முகவும் நெருக்கமாக இருந்தவர்.

இப்படிப்பட்ட பெரும் புகழ்பெற்ற நடிகரான எம் ஆர் ராதா குறித்து இது வரை பலரும் அறிந்திடாத பல சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

1966 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது எம் ஆர் ராதாவிற்கு அறிவிக்கப்பட்டது. அந்த விருதை ஆளுநர் அளிப்பதாக இருந்தது. ஆனால் “தமிழ் தெரியாத ஆளுநர் என் திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் இந்த விருது வேண்டாம்” என தைரியமாக மறுத்திருக்கிறார் எம் ஆர் ராதா.

“என்னுடைய சினிமாவை தயவு செய்து திரையரங்கிற்கு வந்து பாருங்கள்” என முக்குக்கு முக்கு புரோமோஷனுக்காக அலைந்து திரியும் நடிகர்களை இந்த காலத்தில் பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு சினிமா நடிகராக இருந்துகொண்டு “சினிமாவையே பார்க்காதீர்கள்” என்று கூறியவர் எம் ஆர் ராதா. அதாவது “கடுமையாக உழைப்பவனுக்கு கூலி கொஞ்சமாக தருகிறார்கள். ஆனால் கொஞ்சமாக உழைக்கும் சினிமாக்காரர்களுக்கு அதிகம் கூலி தருகிறார்கள்” என்ற காரணத்தினால் சினிமாவே யாரும் பார்க்கவேண்டாம் என்றாராம்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு கலைஞர் என்ற பெயரும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த “கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு அளித்தவர் எம் ஆர் ராதா தான். கருணாநிதி எழுதிய தூக்குமேடை என்ற நாடகத்திற்காக எம் ஆர் ராதா கொடுத்த பட்டம் அது.

அவரை பற்றிய தகவல்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான தகவல் இது தான். அதாவது எம் ஜி ஆருக்கும் எம் ஆர் ராதாவிற்கும் கருத்து வேறுபாடு இருந்தது என்பதும் எம் ஆர் ராதா எம் ஜி ஆரை துப்பாக்கியில் சுட்டார் என்பது நாம் இதற்கு முன் பலமுறை கேள்விபட்டிருப்போம்.

அதன் பின் இருவரும் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். அதன் பிறகு இது குறித்து ஒரு மேடையில் பேசிய எம் ஆர் ராதா, “நானும் எம் ஜி ஆரும் நண்பர்கள். ஆதலால் சும்மா துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தோம். நண்பர்கள் விளையாடும்போது இதெல்லாம் சகஜம்” என பேசியுள்ளார். எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னும் எம் ஜி ஆருடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் எம் ஆர் ராதா என்பது மேலும் ஆச்சரியத்தக்க விஷயம்.

Related Articles
Next Story
Share it