இந்த பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா?.. இளையராஜாவிடம் கெஞ்சிய எம்.எஸ்.வி

by சிவா |   ( Updated:2025-05-01 11:33:37  )
msv
X

60களில் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ் சினிமாவில் மெல்லிசை பாடல்களை கொண்டு வந்தவர் இவர்தான். சின்ன வயதில் தியேட்டரில் திண்பண்டம் விற்கும் வேலை செய்து வந்தார். அப்போதெல்லாம் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் இடம் பெறும். தியேட்டரில் வேலை செய்யும் போது அதை கேட்டு கேட்டு இசையின் மீது ஆர்வம் வந்தது.

அப்போது பல படங்களுக்கும் இசையமைத்த பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்தார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கினார். 60களில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருக்கும் இவர்தான் பிரதான இசையமைப்பாளர்.

எந்த நடிகருக்கு எப்படி பாட்டு போட வேண்டும் என தெளிவாக தெரிந்தவர். எம்.ஜி.ஆருக்கு அவரின் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதையும், சிவாஜிக்கு அவரின் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதையும் கச்சிதமாக கொடுக்க தெரிந்தவர். இவரின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா ஆகியோர் பாடிய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை என்றே சொல்லவேண்டு. அதுவும் கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.வி இசையமைத்த எல்லா பாடல்களுமே காலத்தையும் தாண்டி இப்போதும் சிலாகிக்கப்படுகிறது.

msv

கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.விக்கும் இடையே இருந்த உறவு மிகவும் நெருக்கமானது. கண்ணதாசனை தனது சொந்த அண்ணனாகவே கருதினார் எம்.எஸ்.வி. கண்ணதாசனின் மரணம் எம்.எஸ்.வியை கடுமையாக பாதித்தது. எப்போதும் அவரைப்பற்றியே நினைத்துகொண்டிருந்தார். இந்நிலையில்தான் இசைஞானி இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

கண்ணதாசன் என் கனவில் வந்து அவருக்கு சிலை வைக்க சொல்கிறார். நான் அதை செய்தே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார் எம்.எஸ்.வி. இதை என்னிடம் சொன்னதும் எம்.எஸ்.வி அண்ணன், நான், கே.வி.,மகாதேவன் ஆகிய மூவரும் இணைந்து சென்னை, சேலம், கோவை ஆகிய 3 இடங்களில் இசைக்கச்சேரி நடத்தி அதில் அவரும் பணத்தை வைத்து கண்ணதாசனுக்கு சிலை வைப்பது என முடிவு செய்தோம்.

சேலத்தில் கச்சேரி நடந்தபோது கண்ணதாசன் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடலை பாடுவது என முடிவு செய்தோம். அப்போது என்னிடம் வந்த எம்.எஸ்.வி அண்ணன் ‘இந்த பாடலுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா?’ எனக்கேட்டார். அப்படி அவர் வாசித்துகொண்டே வரும்போது பாடலின் சரணத்தில் எழுந்து வந்து என்னை கட்டியணைத்து எனக்கு முத்தம் கொடுத்தார். ‘என்ன ஒரு அழகான டியூன்.. இது போல யாரும் போட முடியாது’ என பாராட்டினார். அதன்பின் 3 கச்சேரிகளிலும் கிடைத்த பணத்தை வைத்து கண்ணதாசன் அண்ணனுக்கு சிலை வைத்தோம்’ என கூறினார் இளையராஜா.

Next Story