எம்ஜிஆரின் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்தில் உதவி இயக்குனராக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்தார். அந்தப் படத்திலே மிகத் திறமையாக அவர் வேலை செய்ததைக் கண்ட எம்ஜிஆர் தன்னுடைய ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூட எண்ணினார்.
அடிமைப்பெண் படத்தை இயக்கத் திட்டமிட்ட போது அந்த கோபாலகிருஷ்ணனையும், ராமதாஸையும் இணைத்து அவர்கள் ரெண்டு பேரையும் அந்த படத்தை டைரக்ட் செய்யச் சொல்லணும் என்பதுதான் எம்ஜிஆரின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால அந்த வாய்ப்பு அவர்கள் கையை விட்டு நழுவிப் போனது. அதன்பிறகுதான் கே.சங்கர் அந்தப் படத்தை இயக்கினார்.
அப்படிப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால வறுமையில் வாடினார். வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியல. நான்கைந்து மாதம் வீட்டு வாடகைப் பாக்கி இருந்ததால அவரோட வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டிட்டு பணத்தைக் கொடுத்துட்டு வீட்டுக்குள்ள வாங்க. அதுவரைக்கும் சாவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். யார் யாரிடமோ உதவி கேட்டுப் பார்த்தார் கோபாலகிருஷ்ணன். எங்கேயுமே பணம் கிடைக்கல.
என்ன பண்றதுன்னே புரியல. அப்படிப்பட்ட சூழ்நிலையில அவருக்கு நினைவு வந்த ஒரே நபர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அப்போது பட்டிக்காட்டு பொன்னையா படத்தின் படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஓடோடிச் சென்றார் கோபாலகிருஷ்ணன். இவர் எம்ஜிஆரை சென்று பார்ப்பதற்கு முன்னாலே அவரைப் பார்த்த எம்ஜிஆர், அவரைத் தன் அருகில் அழைத்து என்ன விஷயம்? ஏன் இப்படி உடல் மெலிந்து இருக்கீங்க? என்ன பிரச்சனை என்று அவரைப் பார்த்துக் கேட்டார். ஓ என்று அழத் தொடங்கிய கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பிரச்சனை எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துரைத்தார்.
நான்கைந்து மாதமாக வாடகைக் கொடுக்கலன்னு சொல்றீங்க. அப்படிப்பட்டவர் என்னை எப்போ வந்து பார்த்துருக்கணும்? நாலு மாசத்துக்கு முன்னாடியாவது என்னை வந்து பார்த்துருக்க வேண்டாமா? எவ்வளவு வாடகைன்னு சொல்லுங்க என்று அவரைப் பார்த்துக் கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று அந்த கோபாலகிருஷ்ணன் சொன்ன உடனே சரி இன்று இரவுக்குள் அந்தப் பணம் உன்னை வந்து சேரும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். உடனே பக்கத்தில் இருந்த ஸ்டண்ட் கலைஞரான ராம்கிருஷ்ணனை அழைத்தார். அவரிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து இன்று இரவுக்குள் எப்படியாவது கொண்டு போய் கோபாலகிருஷ்ணனிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அன்று இரவு பெரும் மழை.
பணத்தைக் காலையில் கொடுத்து விடலாமா என்ற எண்ணம் கூட ராம்கிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனாலும் எம்ஜிஆர் சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இன்று இரவுக்குள் பணம் வந்து சேர்ந்துடும்னு. எம்ஜிஆர் சொல்லியும் அதைக் கொடுக்கலைன்னா அவரோட வாக்கு தப்பி விடுமே. அது கூடாதுன்னு கொட்டும் மழையிலும் கோபாலகிருஷ்ணனிடம் சென்றார் ராம்கிருஷ்ணன். அந்த பத்தாயிரம் ரூபாயைக் கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு இதுல மூவாயிரம் ரூபாயை வாடகைக்குக் கொடுங்க.
மிச்சம் ஏழாயிரம் ரூபாயை உங்களுக்காக வைத்துக் கொள்ளச் சொன்னார் எம்ஜிஆர் என்றார். அப்போது அந்தக் கோபாலகிருஷ்ணன் கண்களில் இருந்து தரதரவென்று கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. எம்ஜிஆரை இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆரோட மனிதாபிமானம் தான்.





