More
Categories: Cinema History Cinema News latest news

வேலையே இல்லாமல் ராஜினாமா செய்த நாகேஷ்… இந்த மாதிரி சம்பவமெல்லாம் யாருக்குமே நடக்காது!!

நாகேஷ் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அவருக்கு ஒருநாள் கடுமையான அம்மை நோய் தாக்கியது. கிட்டதட்ட பல நாட்கள் எழுந்து நடக்கவே முடியாது சூழல். அதன் பின் ஒரு வழியாக அம்மை நோயில் இருந்து மீண்டு வந்தார் நாகேஷ்.

ஆனால் அம்மை தழும்பு அவரது தோலை சிதைத்துவிட்டிருந்தது. உடல் முழுவதும் எங்கு பார்த்தாலும் அம்மை தழும்புதான் இருந்தது. இதனால் விரக்தி நிலைக்கே சென்றுவிட்டாராம் நாகேஷ். மேலும் அம்மை தழும்பு நிறைந்த தனது முகத்தை பார்த்து சுற்றத்தார் தன்னை ஒதுக்குவதாகவும் அவரது மனதில் தோன்றியது. ஆதலால் அதற்கு மேல் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவரும் படிப்பதாக இல்லை.

Advertising
Advertising

இந்த விரக்தியில் நாகேஷ் வீட்டை விட்டே வெளியேறினார். அப்போது அவரது ஊரில் ஒருவர் தினமும் இலவசமாக உணவு வழங்கி வந்தாராம். அங்கே தினமும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகேஷிற்கு ஒரு நாள் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற குறிக்கோள் வந்திருக்கிறது.

ஒரு நாள் அந்த ஊரில் இருந்த ஒரு பதிவாளர் அலுவலகம் முன்பு ஒரு மரத்தடியில் களைப்பாக உட்கார்ந்திருந்தார் நாகேஷ். அப்போது அங்கு வந்த ஒருவர் நாகேஷை பார்த்து, பதிவாளர் அலுவலத்திற்கு கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யமுடியுமா? என கேட்டிருக்கிறார். நாகேஷும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்திருக்கிறார். அதன் பின் அந்த நபர் நாகேஷுக்கு 2 ரூபாய் தந்திருக்கிறார். இது நல்ல வருமானமாக இருக்கும்போலவே என்று நினைத்த நாகேஷ், தொடர்ந்து தினமும் அங்கு வரும் நபர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை செய்யத்தொடங்கியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த பணியும் பிடிக்காமல் போக, ஒரு நாள் நாகேஷ் அருகில் இருந்த தாலுகா அலுவலகத்துக்குள் நுழைந்தார். அங்குள்ள காலி நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்தார் நாகேஷ். அவர் உட்கார்ந்த பிறகுதான் அது அந்த அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை செய்பவர் அமரும் நாற்காலி என்று தெரிந்திருக்கிறது. அவருக்கு முன்னால் இருந்த டைப்ரைட்டிங் மிஷினை பார்த்த அவர், அதில் தனது இஷ்டம் போல் டைப் அடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது தாசில்தாருடைய பெண் ஒருவர் அவரிடம் வந்து சில காகிதங்களை டைப் அடிக்கச்சொல்லி கொடுத்திருக்கிறார். அதற்கு நாகேஷ் “நான் ரொம்ப பிசியா இருக்கிறேன். இதுலாம் பண்ணமுடியாது” என கூறியிருக்கிறார். கோபமான அப்பெண் உள்ளே சென்று தாசில்தாரை அழைத்து வந்திருக்கிறார்.

தாசில்தார் நாகேஷை பார்த்து “என்னுடைய பெண் டைப் செய்ய சொன்னால் முடியாது என கூறினாயாமே” என சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு நாகேஷ், “உங்களிடமும் சொல்கிறேன். என்னால் முடியாது. இப்படியெல்லாம் வற்புறுத்தினீங்கன்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்” என கூறி ஒரு ராஜினாமா கடிதத்தை டைப் செய்து தாசில்தாரிடம் நீட்டிருக்கிறார். அந்த தாசில்தாரும் அதனை வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நகைச்சுவையான ஆச்சரியத்தக்க ஒரு சம்பவம் வேறு யாருக்காவது நடக்குமா???

Published by
Arun Prasad

Recent Posts