உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி!!... புடவை கட்டிக்கொண்டு வலம் வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?

Ulagam Sutrum Valiban
எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து களமாடி வந்தார். அதன் பின் 1972 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.

MGR
திமுகவில் இருந்து பிரிந்த பிறகு எம்.ஜி.ஆர், தனது திரைப்படங்களின் மூலம் தனக்கான அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொண்டார். அதன் பின் 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், தனது மரணம் வரைக்கும் ஆட்சிப்பொறுப்பிலேயே இருந்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய பின், அவர் நடித்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்கு ஏற்பட்ட பல தடைகளை குறித்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

MGR
எம்.ஜி.ஆர் “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அந்த படத்தின் உருவாக்கத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என பல முயற்சிகள் நடந்ததாம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எந்த ஸ்டூடியோவில் நடந்துக்கொண்டிருந்தாலும் அந்த ஸ்டூடியோ இருக்கும் பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் ஜெனரேட்டரை பயன்படுத்தி படப்பிடிப்பை தொடங்கினாராம் எம்.ஜி.ஆர்.
“உலகம் சுற்றும் வாலிபன்” போஸ்டர்களை சென்னையில் ஒட்டுவதை தடுக்கும் விதமாக அப்போதுள்ள சென்னை மாநகராட்சி ஆணையம் போஸ்டர் ஒட்டுவதற்கான வரியை பல மடங்கு உயர்த்தியதாம். அதே போல் சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிப்பதற்கும் பலர் தயாராக இருந்தனராம். ஆதலால் “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை போஸ்டர்களே ஒட்டாமல் வெளியிட முடிவு செய்தாராம் எம்.ஜி.ஆர்.

Ulagam Sutrum Valiban
“உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் வெளியாவதற்கு முன் பல முக்கிய பிரமுகர்களுக்காக அத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னை தேவி பேரடைஸ் திரையரங்கில் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த நாளில் அந்த திரையரங்கு இருந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாம்.
மேலும் அப்போதுள்ள மதுரை மேயரான முத்து, “உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவர வாய்ப்பே இல்லை. அதையும் மீறி வெளிவந்தால் நான் புடவை கட்டிக்கொள்கிறேன்” என எம்.ஜி.ஆருக்கு சவால் விட்டாராம்.

Ulagam Sutrum Valiban
எனினும் இது போன்ற தடைகளை எல்லாம் தாண்டி, 1973 ஆம் ஆண்டு மே மாதம் “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்தால் புடவை கட்டிக்கொள்வதாக சவால்விட்ட மதுரை முத்துவிற்கு அந்த சவாலை ஞாபகப்படுத்தும் விதமாக பல அதிமுக தொண்டர்கள் புடவை கட்டிக்கொண்டு மதுரை முத்துவை சந்திக்க வேண்டும் புறப்பட்டார்களாம். ஆனால் எம்.ஜி.ஆர், அவர்களை எல்லாம் தடுத்தி நிறுத்தி “இப்படிப்பட்ட அநாகரிகமான அரசியலில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை” என அவர்களுக்கு புரியவைத்தாராம்.