தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம்!.. பாடலில் பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!..

Kalai arasi
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். இவர் உழைக்கும் மக்களுக்காக அதிகமாக எழுதினார். அதனால் தான் இவரை மக்கள் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். அந்தக் காலத்தில் வெளிவந்த முதல் அறிவியல் படம் தான் கலையரசி. அந்தப் படத்தில் வந்த ஒரு அற்புதமான பாடல் குறித்து திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
கலையரசி படம் 1963ல் வெளியானது. எம்ஜிஆர், பானுமதி, ராஜஸ்ரீ, நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். பட்டுக்கோட்டையார் 1959ல் இறந்து விடுகிறார். இந்தப் படம் அவர் இறந்து 3 வருஷத்திற்குப் பிறகு வெளியானது. இது ஒரு விஞ்ஞானப்படம். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலேயே இதை அறிவியல் படமாக எடுத்திருப்பார்கள். இது பெரிய ஆச்சரியம்.
1969ல் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கே நிலவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இந்தப்படத்தை அப்போதே ஏ.காசிலிங்கம் இயக்கிவிட்டார். அவர் இன்றைக்கும் நினைக்கப்பட வேண்டியவர். நமக்கு எல்லாம் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் தான் முதல் விண்வெளிப்படமாக தெரியும். தற்போது அயலான் படம் வந்தது.
இந்தப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து நம்பியார் பூமிக்கு வருகிறார். அந்தக் கிரகத்தில் அறிவியல் வளர்ந்த அளவு கலைகள் வளர்ந்திருக்காது. அதனால் இங்கு வருகிறார். அதனால் இங்கு கலைகள் தெரிந்த ஒருவரை அழைத்துச் செல்லலாம் என்பதற்காக பானுமதியைக் கடத்துகின்றனர். அதை எம்ஜிஆர் தடுக்கிறார்.

PK, MGR
அப்போது கோமாளி வேஷம் போட்டு வேறொரு விண்கலத்தில் சென்று பானுமதியை மீட்கச் செல்கிறார். அங்குள்ளவர்கள் கோமாளியே இந்தியாவைப் பற்றிப் பாடு என்று கேட்கின்றனர். அதற்கு அதிசயம் பார்த்தேன் மண்ணிலே... அது அப்படியே நிக்குது என் கண்ணிலே எனப் பாடுகிறார்.
1960 வரை எம்ஜிஆருக்கான பாடல்களை அதிகமாகப் பாடியவர் சீர்காழி கோவிந்தரராஜன். இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன். மொத்த இந்தியாவையும் இந்தப் பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பார் பட்டுக்கோட்டையார்.
இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை வெகு அருமையாகப் பாடலில் சொல்லி இருப்பார் பட்டுக்கோட்டையார். அதிலும் மலையைச் செதுக்கி வைத்த சிலை இருக்கு என்று வரிகளைப் போட்டு இருப்பார். இயற்கை அழகு, செயற்கை அழகு, இந்தியாவில் இயற்கை எவ்வளவு மணத்தோடு இருக்கு என்றும் எழுதியிருப்பார். இந்தப் பாடலில் இந்தியாவை அழகான மேப் போல வரிகளில் காட்சிப்படுத்தியிருப்பார்.
அன்றைய காலகட்டத்தில் திராவிட சிந்தனை ஓங்கி வளர்ந்து இருந்தாலும் திராவிடம் என்ற சொல்லை ஒரு இடத்திலும் பயன்படுத்தி இருக்க மாட்டார்.அதே போல தமிழைப் பற்றியும் அழகாக வரிகளில் எடுத்துக் காட்டியிருப்பார். இப்படி 3 வகையான வெரைட்டிகளை ஒரே பாடலில் கொண்டு வந்தவர் தான் பட்டுக்கோட்டையார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.