என்னைய யாருமே நம்பல... சொந்த வீடு கூட இல்லை…ஆனா? அமீரின் மனக்குமுறல்

“மௌனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” என தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த டிரெண்ட் செட்டிங் திரைப்படங்களை இயக்கியவர் அமீர். இவர் “யோகி”, “வடசென்னை”, “மாறன்” போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் இறுதியாக ஜெயம் ரவியை வைத்து இயக்கிய “ஆதிபகவன்” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. அதன் பின் அமீர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யாவை வைத்து “சந்தனத்தேவன்” என்ற திரைப்படத்தை அமீர் இயக்குவதாக இருந்தது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ஜல்லிக்கட்டை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாவதாக தகவல்கள் வந்தது. எனினும் அத்திரைப்படம் கைவிடப்பட்டது.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் “இறைவன் மிகப்பெரியவன்” என்ற திரைப்படத்தை அமீர் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. எனினும் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த அமீர், தனது அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் “நான் சினிமாத்துறைக்கு முதன்முதலாக வந்தபோது என்னை யாரும் நம்பவே இல்லை. அப்போது தான் சினிமாத்துறையில் நம்பிக்கைக்கு மதிப்பே இல்லை என தெரியவந்தது” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “நான் இப்போதுதான் என்னுடைய 5 ஆவது திரைப்படத்தையே இயக்குகிறேன். நான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். இதுவரை நான் சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. அப்படிப்பட்ட ஒரு Pressure வெளியில் இருந்து தான் வருகிறதே தவிர எனது மனைவியிடமிருந்தோ குழந்தைகளிடமிருந்தோ வந்ததே இல்லை. ஆனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.