Cinema History
கங்கை அமரனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட முடிவெடுத்த இளையராஜா… அந்த பிரபலமான ரஜினி பாடல் உருவானது இப்படித்தான்!!
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், “கோழிக் கூவுது”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “கரகாட்டக்காரன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் “சுவரில்லா சித்திரங்கள்”, “வாழ்வே மாயம்” போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். எனினும் கங்கை அமரன் இயக்கிய பல திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தவர் கங்கை அமரன். இளையராஜா சினிமாத் துறையில் தனது இசைப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பில் இருந்தே இளையராஜாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் உடன் இருந்தவர் கங்கை அமரன்.
1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “தர்ம துரை” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்” என்ற பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்த நிலையில் இப்பாடல் உருவானது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் குறித்து தற்போது வெளிவந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் இளையராஜா தனது அண்ணன் பாஸ்கர், தம்பி கங்கை அமரன் ஆகியோருடன் சேர்ந்து உணவருந்துவதுதான் வழக்கமாம். அப்போது ஒரு நாள் “தர்ம துரை” திரைப்படத்தின் பாடல் பதிவின்போது இளையராஜா “இனி நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடுங்க, நான் தனியா சாப்பிடுகிறேன்” என்று சொன்னாராம். இதனை கேட்ட கங்கை அமரன் “ஏன்?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு இளையராஜா “நீங்க ரெண்டு பேரும் அசைவம் சாப்பிடுறவங்க, நான் இப்போலாம் சைவத்துக்கு மாறிட்டேன். அதனால் உங்களோடு நான் சாப்பிடும்போது உங்களுக்கு சங்கடமா இருக்கும். அதனால்தான் நான் உங்களோடு சாப்பிட விரும்பல” என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா.
இளையராஜா இது போன்று ஒரு காரணத்தை கூறினாலும், உண்மையான காரணம் வேறு ஏதோ இருப்பதாக கங்கை அமரனுக்குத் தோன்றியதாம். இந்த நிகழ்வுதான் “தர்ம துரை” திரைப்படத்தில் “ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான்” என்ற பாடலை எழுத தூண்டியதாம். இந்த பாடலை எழுதிய கங்கை அமரனை ரஜினிகாந்த் பாராட்டித் தள்ளினாராம்.
இதையும் படிங்க: உலக நாயகனின் ஆஸ்தான இயக்குனர்… கே.விஸ்வநாத்தின் படைப்புலகம்… ஒரு பார்வை…