சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், உலகநாயகன் கமல்ஹாசனையும் வைத்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அந்த வகையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமலுக்கு ஒரு சகலகலாவல்லவன், ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை என இந்த இரு படங்களைச் சொன்னாலே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெற்றது என்று உங்களுக்கேத் தெரியும்.
ஆனால் அவருக்குள்ளே நடிக்கின்ற ஆசை இருக்குன்னு சொன்னா யாராவது நம்புவீங்களா? ஆனால் அப்படி ஒரு ஆசை அவருக்கு ஆரம்ப கட்டத்திலே இருந்தது என்பதுதான் உண்மை. தெய்வப்பிறவி படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார் எஸ்.பி.முத்துராமன். அந்தப் படத்தில் அவருக்கு நடிக்கிற ஆசை இருக்கு என்பதை அந்தப் படத்தின் இயக்குனரான கிருஷ்ணன் பஞ்சு எப்படியோ தெரிந்து கொண்டார்.
அதன் காரணமாகத் தான் அங்கமுத்துவின் மகனாக நடிக்கின்ற வாய்ப்பை அவருக்கு அந்தப் படத்தில் உருவாக்கித் தந்தார். முதல் படத்திலே நடிகர் திலகம் சிவாஜிகணேசனோடு நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நிஜமாகவே எனது அதிர்ஷ்டம். அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் மட்டும் நினைத்து இருந்தால் அவர் இயக்கும் படங்களில் கூட நடித்து இருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின்னால அவருக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் போனது.
