விஜய் போட்டோவை காட்டி வாய்ப்பு தேடி அலைந்த எஸ்.ஏ.சி!.. ஒரு பிளாஷ்பேக்

80களில் கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். புரட்சிகரமான படங்களை இயக்கியவர் என்பதால் இவருக்கு புரட்சி இயக்குனர் என்கிற பட்டமும் உண்டு. குறிப்பாக அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள். தவறுகளை செய்துவிட்டு சட்டத்தின் ஓட்டையிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை தனது படங்களில் விமர்சிப்பது எஸ்.ஏ.சியின் ஸ்டைல்.
விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி அவரை முன்னணி நடிகர்கள் ஒருவராக மாற்றியது எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் படத்தையும் இவர் இயக்கினார். அப்பா இயக்குனர் என்பதால் நாமும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்க்கு வந்தது.
ஆனால். எஸ்.ஏ.சிக்கோ அதில் விருப்பமில்லை. அவர் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகரே தனது சொந்த பணத்தை போட்டு செலவு செய்து படத்தை தயாரித்து நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜயை சினிமாவில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து மகன் விஜயை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கினார்.
அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானார் விஜய். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக விஜய் மாறினார். அவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், விஜயின் இந்த வளர்ச்சிக்கு பின்னால் எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பு இருக்கிறது. விஜயக்காக பல இயக்குனர்களிடம், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறார்.
இதுபற்றி சினிமா விழா ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சி ‘விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவுடன் நானே இயக்கினால் சரியாக இருக்காது என நினைத்தேன். விஜயின் போட்டோவை எடுத்துகொண்டு பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போய் காட்டி ‘இவன் என் மகன். இவனை வைத்து படமெடுங்கள். நான் செலவு செய்கிறேன்’ என சொன்னேன். யாரும் முன்வரவில்லை.
ஒருமுறை ஆர்.பி.சவுத்ரியிடம் இப்படி போய் கேட்டேன். அவரோ ‘நீங்களே பெரிய இயக்குனர். உங்கள் மகனை வைத்து நீங்களே படம் இயக்குங்கள்’ என சொன்னார். அதன்பின்னரே விஜயை வைத்து நான் படமெடுத்தேன்’ என சொல்லியிருக்கிறார்.