மூன்றரை மணி நேரத்தில் இதிகாசத்தைத் தெளிவா தெரிஞ்சுக்கணுமா... அப்படின்னா இந்தப் படத்தைப் பாருங்க..

Sampoorna Ramayanam
நம் நாடு பழமை வாய்ந்த நாடு. அதன் சிறப்பம்சங்களில் ஒன்று நம் நாட்டின் இருபெரும் இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும். இந்தக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வந்துவிட்டன. என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சம் கூட சலிக்காத படம் தான் சம்பூர்ண ராமாயணம். இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும். ராமாயணம் மனதில் ஆழப்பதிந்து விடும். ராமாயணத்தைப் பொருத்தவரையில் கதையின் கேரக்டர்கள் தான் ரொம்பவே முக்கியம்.
ஒவ்வொரு காட்சியிலும் கேரக்டர்களாக வந்து கொண்டே இருக்கும். அதிகமான கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு அருமையான இதிகாசம் தான் இந்த ராமாயணம். அந்த சிறப்பில் இருந்து கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் இந்தப் படத்தை செம்மையாக எடுத்துள்ளார் இயக்குனர் கே.சோமு. அக்கால கட்டத்தில் இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போது பார்த்தாலும் நாம் இந்தப்படத்தைக் கடைசி வரையில் ஒரே மூச்சாகப் பார்த்து விடுவோம். அவ்வளவு அருமையான திரைக்கதையை எழுதிய சிறப்புக்குரியவர் ஏ.பி.நாகராஜன்.

Sampoorna ramayanam Film crew
1958ல் வெளியான இந்தப் புராண படமான சம்பூர்ண ராமாயணம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கை போடு போட்டது. படத்தில் என்.டி.ராமராவ், பத்மினி, சிவாஜி, நாகையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். தயாரித்தவர் எம்.ஏ.வேணு. மூன்றரை மணி நேரம் ஓடினாலும் சிறிது கூட போரடிக்காமல் இருந்தது. இந்தப் படத்தில் என்.டி.ராமராவுக்குக் குரல் கொடுத்தவர் கே.வி.சீனிவாசன். 1959ல் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியானது. இந்தப் படமானது ராமனின் பிறப்பு முதல் அவர் வனவாசம் செல்லும் வரையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
படத்தின் சிறப்பு என்னவென்றால் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள் தேர்வு இருந்தது. உதாரணத்திற்கு இந்தப் படத்தில் என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி சீதாவாகவும், சிவாஜி பரதனாகவும், சித்தூர் நாகையா தசரதனாகவும் நடித்து இருப்பார்கள். வி.கே.ராமசாமி குகனாக வருவார்.
அதே போல லட்சுமணராக வருபவர் பி.வி.நரசிம்மபாரதி. ராவணனாக வருபவர் டி.கே.பகவதி. கோசலையாக வருபவர் எஸ்.டி.சுப்புலெட்சுமி, கைகேயியாக வருபவர் ஜி.வரலட்சுமி. சூர்ப்பனகையாக வருபவர் எம்.என்.ராஜம், மண்டோதரியாக வருபவர் சந்தியா.
ராமாயணம் ஒரு இதிகாசம். அதன் கதை பாரம்பரியமிக்க சிறப்புடையது. அதனால் அந்தக் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு அப்போதைய நடிகர்கள் வெகு சிறப்பாக நடித்தனர். இந்தக் கதையானது வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.