வேறு வழியின்றி ரஜினிக்கு தந்தையாக நடித்த சத்யராஜ்… எல்லாம் சிபி பிறந்த நேரம்தான்…

Mr.Bharath
தமிழின் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த சத்யராஜ், தொடக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற டாப் நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். “விக்ரம்”, “மிஸ்டர் பாரத்”, “காக்கிச் சட்டை” என பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். குறிப்பாக இதில் “விக்ரம்” திரைப்படத்தில் தீவிரவாதியாக தனது அசத்தலான நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார் சத்யராஜ்.
அதே போல் “சட்டம் என் கையில்”, “நூறாவது நாள்”, “வில்லாதி வில்லன்”, போன்ற பல திரைப்படங்களில் வெறித்தனமான வில்லனாக நடித்து பார்வையாளர்களை அசரவைத்திருந்தார்.

Nooravathu Naal
இதில் “நூறாவது நாள்” திரைப்படத்தில் இடம்பெற்ற சத்யராஜ்ஜின் தோற்றம் பார்வையாளர்களை பயமுறுத்தியது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார் சத்யராஜ்.
பாயும் புலி
1983 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாயும் புலி”. இத்திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். ஏ.வி.எம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
சிபி சத்யராஜ்
‘பாயும் புலி” திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு ஏவிஎம் நிறுவனம் சத்யராஜ்ஜை அணுகியபோது அவரது மனைவி கர்ப்பமாக இருந்ததால் பிரசவ காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆதலால் சத்யராஜ் அந்த படத்தில் நடிக்கவா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தாராம்.
இதையும் படிங்க: இயக்குனருக்கு முதல் படம்… உதவி இயக்குனரை பொறுப்பேற்க சொன்ன சிவாஜி… என்ன காரணம் தெரியுமா?

Sibi
அப்போது அவரது மனைவியும் தாயாரும் “ஏவிஎம் மாதிரியான பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வந்திருக்கிறது. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரசவத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என அவருக்கு தைரியமூட்டி “பாயும் புலி” படத்தில் நடிக்குமாறு கூறினார்களாம். அப்படி அவர் அந்த திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சிபி சத்யராஜ் பிறந்தார்.
மிஸ்டர் பாரத்
“பாயும் புலி” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.வி.எம். நிறுவனம் சத்யராஜ்ஜை அணுகியது. இந்த முறை ரஜினிகாந்த்திற்கு தந்தை வேடம். ஆனால் ரஜினிகாந்த்துக்கு தந்தையாக நடிப்பதில் சத்யராஜ்ஜிற்கு சுத்தமாக விருப்பமே இல்லை.

Mr.Bharath
ஆனால் இதற்கு முன் “பாயும் புலி” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் தனது மகன் நல்லபடியாக பிறந்தான் என்பதை நினைவில் கொண்ட சத்யராஜ், அந்த சென்ட்டிமெண்ட் காரணமாக ரஜினிகாந்திற்கு தந்தையாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இவ்வாறுதான் “மிஸ்டர் பாரத்” திரைப்படத்தில் சத்யராஜ் நடித்தார்.
“மிஸ்டர் பாரத்” திரைப்படத்தில் ரஜினிக்கு தந்தையாக நடித்திருந்தாலும் வில்லனாகவே சத்யராஜ் நடித்திருந்தார். குறிப்பாக அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னம்மா கண்ணு” என்ற பாடல் காலத்தை தாண்டி நிற்கும் பாடலாக அமைந்தது. மேலும் இதில் சத்யராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.