Vijayakanth, Sathyaraj
Vijayakanth, Sathyaraj

புரட்சித்தமிழன் என்றால் நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அதே போல புரட்சிக்கலைஞர் என்றால் அது விஜயகாந்த். இரண்டு புரட்சிகளும் இணைந்து நடித்தால் படம் எப்படி இருக்கும்?

80களில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஈட்டி, ராமன் ஸ்ரீராமன், நாளை உனது நாள், 24 மணி நேரம், கரிமேடு கருவாயன், நூறாவது நாள், மனதில் உறுதி வேண்டும், ஜனவரி 1, சந்தோஷக் கனவுகள் உள்பட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சத்யராஜ் விஜயகாந்துடன் இணைந்து நடித்த ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போம்.

விஜயகாந்துடன் சத்யராஜ் இணைந்து ஒரு படத்தில் நடித்தாராம். அதாவது, சத்யராஜை யானை துரத்தி வருவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. யானை வரவழைக்கப்பட்டது. பழக்கப்பட்ட யானை தான். என்றாலும் சத்யராஜிக்கோ ஒரே பயம். யானை துரத்தினால் என்ன செய்வது என்று. யானை துரத்தினால் யார் தான் பயப்படாமல் இருப்பார்கள்? எல்லோருக்கும் பயம் வருவது இயல்பு தானே.

Eetti Movie
Eetti Movie

அதற்கு விஜயகாந்த், சத்யராஜிடம் ஒரு யோசனை சொன்னாராம். சத்யராஜ் நீங்க என்ன செய்யுறீங்கன்னா, யானைக்கு மிகவும் பிடித்தமான உணவு வெல்லம். அதைக் கையில் வைத்தபடி, யானையிடம் காட்டியபடி ஓடுங்கள். யானையும் வெல்லத்தை சாப்பிடும் ஆசையில் உங்களைத் துரத்திக் கொண்டே வரும். கொஞ்ச தூரம் மட்டும் அப்படியே ஓடுங்கள். அதன்பிறகு வெல்லத்தை தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிடுங்கள் என்று சொன்னாராம்.

அதைக் கேட்டதும் சத்யராஜ் அடித்த கமெண்ட் தான் ஹைலைட். ‘இது நல்ல யோசனை தான். ஆனா நான் வெல்லத்தைத் தூக்கிப் போடுவதை யானை கவனிக்காமல் விட்டு விட்டால் என்னோட நிலைமை என்னாகும்?!..? என்னை அல்லவா மீண்டும் துரத்திக் கொண்டே வரும்’ என்றாராம். அதைக் கேட்டதும் விஜயகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.