என்னை அந்த மாதிரி பேசறாங்கன்னு வருந்திய சிவாஜி... காமெடி படம் தயார் செய்து அசத்திய இயக்குனர்...!

Sivaji
1964ல் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் அந்தக் காலத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்தில் இளமை துள்ளலான காதலும், காமெடியும் கலந்தே இருக்கும்.
அந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். அந்தப் படத்தைப் பார்த்ததும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரிடம் இப்படி சொன்னாராம். 'உன் பேரைச் சொன்னாலே எல்லாரும் அழுமூஞ்சி டைரக்டர்னு சொல்வாங்க. அவங்க முகத்துல எல்லாம் இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் நீ கரியைப் பூசிட்டியே...'ன்னு பாராட்டினாராம். 'படம் ரொம்ப அருமையா இருக்கு.
எனக்கும் இதே மாதிரி ஒரு காமெடி படம் எடுத்துக் கொடு. ஏன்னா என்னையும் அழுமூஞ்சின்னு தான் சொல்றாங்க...'ன்னு சொன்னார். அதுமட்டுமல்லாமல் 'இந்தப் படத்துக்காக நான் சண்முகம் கிட்டே சொல்லி கால்ஷீட் தரச் சொல்றேன்..'னாரு என்றார். நடிகர் திலகத்தின் தம்பி தான் சண்முகம். இவர் தான் சிவாஜியின் கால்ஷீட்டுகளை அப்போது கவனித்து வந்தார்.

Ooty varai uravu
அதற்கு ஸ்ரீதர் அண்ணே, 'நான் ஒரு கதை உங்களுக்காக ரெடி பண்ணிருக்கேன். காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற காமெடி ஸ்கிரிப்ட் தான் அது. சீக்கிரம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம்' என்றார். அதைக் கேட்டதும் 'சரி' என்றார் சிவாஜி.
ஆனால் ஸ்ரீதர் அடுத்தடுத்து பட வேலைகளில் பிசியாகி விட்டார். வெண்ணிற ஆடை படத்தை அப்போது இயக்கிக் கொண்டு இருந்தார். அதனால் உடனடியாக சிவாஜியோடு இணைந்து படம் பண்ண முடியவில்லை.
ஆனாலும் சந்திக்கும் போதெல்லாம் சிவாஜி அதைப் பற்றிக் கேட்க தவற மாட்டார். 'அண்ணே கதை தயாராக இருக்கு. உங்களை வச்சித் தான் பண்ணுவேன். நாம ரெண்டு பேருமே இப்போ பிசி. அதனால் கொஞ்சம் பொறுங்க. சீக்கிரமே பண்ணிடுவோம்'னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சி பண்ணினேன். அந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் கோவை செழியன். அந்தப் படம் தான் ஊட்டி வரை உறவாக மலர்ந்தது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.