எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு இமயங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இது ரஜினி, கமலுக்கு முந்தைய தலைமுறைக்கான காலம். அரசர் வேடத்தில் ஒருவர் நடித்தால் மற்றவரும் அவ்வாறே நடிப்பார். கோர்ட் சூட் போட்டு ஒருவர் நடித்தால் மற்றவரும் அவ்வாறே நடிப்பார். ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று படம் எடுத்தால் மற்றவரும் எடுப்பார். ஒருவர் 3 எழுத்தில் படம் எடுத்தால் மற்றவரும் அவ்வாறே எடுப்பார்.
ஒருவர் குடும்பக் கதை எடுத்தால் அதே போல மற்றவருக்கும் அழகழகான குடும்பக் கதைகள் வரும். பாடல்களிலும் இருவரது படங்களில் கடும் போட்டி நிலவும். அந்த வகையில் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டியே நிலவிய போதும் நிஜ வாழ்வில் அண்ணன், தம்பிகளாகவே நடந்து கொண்டனர். இன்றைய காலம் போல் அப்போதும் ரசிகர்களுக்குள் அவ்வப்போது கடும் வாக்குவாதம் எல்லாம் வரத்தான் செய்யும். பட ரிலீஸின் போது திரையரங்குகளைத் தெறிக்க விடத்தான் செய்வார். இது ஒருபுறம் இருக்க, அந்த இனிய நாள் வந்தது.
அது நடிகர் திலகத்தின் திருமண நாள். சிவாஜிகணேசனின் திருமண விழா தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. மாப்பிள்ளை சிவாஜி பந்தி நடக்கும் இடத்துக்கே விருந்தினர்களை வரவேற்க வந்து விட்டார். எம்ஜிஆர் அப்போது வந்தார். அவரைப் பார்த்து உற்சாகமான சிவாஜி வாங்கண்ணே என வரவேற்றார். அண்ணே நீங்க கையில கத்தி எடுத்தாலே கைதட்டி ஜனங்க ரசிக்கிறபோது கோர்ட்டு, சூட் போட்டு நடிக்கணுமா? என தெரியாமல் கேட்டுவிட்டார்.
எம்ஜிஆர் சிவாஜி தன்னை அவமதிப்பதாக நினைத்தார். அவர் மனதுக்குள் ஒரு திட்டம் உருவானது. சிவாஜியை வைத்து வெற்றிப்படங்கள் இயக்கிக் கொண்டு இருந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களைத் தன்னை வைத்துப் படம் எடுக்க வைக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டம்.
பி.ஆர்.பந்துலு சிவாஜியை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கொடுத்தவர். அவர் இயக்கிய முரடன் முத்து படத்தை சிவாஜியிடம் தன் 100வது படமாக அறிவிக்கச் சொன்னார். ஆனால் சிவாஜி நவராத்திரி படத்தை 100வது படமாக அறிவித்தார்.
அவர் கோபித்துக் கொண்டு எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவனைக் கொடுத்தார். இப்படி சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணி, ஏபி.நாகராஜன் என எல்லோரும் எம்ஜிஆர் பக்கம் வந்து நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்தனர்.