Cinema History
இது சிவக்குமார் ஹீரோவா நடிச்ச படம்… ஆனால் எங்க தேடுனாலும் அவர் இருக்கமாட்டாரு… ஏன் தெரியுமா??
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் சிவக்குமார். இவர் தமிழில் “காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்தார்.
இந்த நிலையில் சிவக்குமார் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தும் அத்திரைப்படத்தில் அவர் எங்கும் தென்படவில்லையாம். அது எந்த திரைப்படம்? ஏன் அவர் அதில் தென்படவில்லை? என்பதை இப்போது பார்க்கலாம்.
1968 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பணமா பாசமா”. இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இத்திரைப்படத்தின் இயக்குனரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிவக்குமாரை சந்தித்து “பணமா பாசமா என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கப்போகிறேன். அதில் நீங்கள்தான் கதாநாயகன்” என்றாராம். இதை கேட்டவுடன் சிவக்குமார் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து மீண்டும் சிவக்குமாரை சந்தித்த கோபாலகிருஷ்ணன் “இந்த படத்தை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதையாக மாற்றியிருக்கிறேன். ஒன்று நீங்கள், இன்னொன்று ஜெமினி கணேசன். இந்த படத்தில் நீங்கள் இரண்டாவது கதாநாயகன்தான் என்றாலும் உங்களுக்கு இத்திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்” என கூறியிருக்கிறார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து மீண்டும் சிவக்குமாரை சந்தித்த கோபாலகிருஷ்ணன் “இந்த படத்தில் நீங்கள் நான்கு காட்சிகளில் மட்டுமே வருகிறீர்கள். நான்கு காட்சிகள் வந்தாலும் அந்த காட்சிகள் நச்சுன்னு இருக்கும். அது போக உங்களுக்கு ஒரு பாடல் காட்சியும் உண்டு” என கூறினாராம்.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிவக்குமாருக்காக ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாம். அதே போல் சில காட்சிகளிலும் அவர் நடித்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் அத்திரைப்படத்தின் கதாநாயகிக்கும் சில பிரச்சனைகள் வந்ததால் சிவக்குமார் நடித்திருந்த அனைத்து காட்சிகளையும் வெட்டிவிட்டாராம். ஆதலால் “பணமா பாசமா” திரைப்படத்தில் சிவக்குமார் எங்குமே தென்படமாட்டாராம்.
இதையும் படிங்க: ஹீரோக்களை திருப்திப்படுத்த தயாரிப்பாளர்கள் இந்த மாதிரிலாம் பண்றாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
எனினும் “பணமா பாசமா” திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு சிவக்குமாருக்கு அழைப்பு வந்ததாம். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சிவக்குமாரும் சென்றிருக்கிறார்.
அங்கே சிவக்குமாருக்கு ஒரு கேடயம் ஒன்று கொடுக்கப்பட்டதாம். சிவக்குமார் அந்த கேடயத்தை வாங்கிவிட்டு திரும்பியபொழுது அருகில் இருந்த ஒரு நடிகர் அவரிடம் “இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாராம். அதற்கு சிவக்குமார், “ஆமாம் நான் நடிச்சேன். ஆனா அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டார்கள்” என்று கூறினாராம்.