அந்த 3 நடிகர்களுடன் நடிச்சிட்டா ஓவர்!.. எஸ்.ஜே.சூர்யாவின் ஆசை நிறைவேறுமா?!….

by சிவா |   ( Updated:2025-04-17 06:54:38  )
sj surya
X

இயக்குனர் வஸந்த் உள்ளிட்ட சிலருடன் உதவி இயக்குனராக வேலை செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்தார். ஹோட்டலில் கூட இவர் வேலை செய்திருக்கிறார். நடிக்க வாய்ப்பு கிடைக்காது என தெரிந்தபின் உதவி இயக்குனர் ஆகலாம். அப்படியே இயக்குனராகி பின்னால் நாம் இயக்கும் படத்தில் நாமே நடிப்போம் என முடிவெடுத்தார்.

வாலி படம் மூலம் இவரை இயக்குனராக மாற்றியவர் அஜித்தான். அஜித் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா சுவாரஸ்யமாக அந்த படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அடுத்த படமே விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி. இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இனிமேல் நாமே ஹீரோவாக நடிப்போம் என முடிவெடுத்து நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கினார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கி சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாறினார். அதுதான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

தொடர்ந்து பல படங்களிலும் வில்லன் வாய்ப்பு வந்தது. இடையில் மான்ஸ்டர், ஜிதர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களிலும் நடித்தார். மார்க் ஆண்டனி படத்தில் அதகளம் செய்திருந்தார். சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்திலும் அசத்தலாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கினார்.

இப்படி சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்துவிட்டார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.ஜே.சூர்யா ‘ரஜினி சார், அஜித் சார் மற்றும் பவன் கல்யாண் சார் ஆகிய மூவருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அது நடந்துவிட்டால் போதும்’ என சொல்லியிருக்கிறார்.

குட் பேட் அக்லி படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது எஸ்.ஜே.சூர்யாதான் என்கிற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல், சூர்யாவுடனும் எஸ்.ஜே.சூர்யா இன்னமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம், கில்லர் என்கிற படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார். இதில், அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Next Story