Thevar Magan: தேவர் மகன் வெளியாகி 33 வருடங்கள்!.. மறக்க முடியாத தமிழ் சினிமா...
நடிகர் கமல்ஹாசன் எழுதி, நடித்த திரைப்படம் தேவர் மகன். மலையாள பட இயக்குனர் பரதன் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலின் அப்பாவாகவும், பெரிய தேவராகவும் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நாசர் நடிக்க கௌதமி, ரேவதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
வெளிநாடு சென்று அங்கு ரெஸ்டாரன்ட் வைக்க ஆசைப்படும் கமல் அப்பாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வரும்போது அங்கு பரம்பரை பகை காரணமாக நடக்கும் சம்பவங்களை பார்த்து அதிர்ந்து போகிறார். தனது தந்தை சிவாஜியும் இறந்துவிட அவரின் இடத்தில் இருந்து கிராம மக்களை வழிநடத்த தான் இங்கே இருக்க வேண்டும் என கமல் முடிவெடுக்கிறார். அதற்காக தனது ஆசை மற்றும் காதலை தியாகம் செய்துவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறார்.

நாசர் என்ன செய்தாலும் மிகவும் பொறுமையாகவே போகும் கமல் நாசர் செய்யும் ஒரு காரியத்தால் எப்படி வெகுண்டு எழுந்து அவருக்குள் இருக்கும் மிருகம் வெளியே வரும்போது என நடக்கிறது என்பதை சொல்லி இருந்தார் கமல். முதல் காட்சியில் ரயிலில் வந்து தனது ஊரில் இறங்கும் கமல் படத்தின் இறுதிக்காட்சியில் நாசரை கொன்று விட்டு கைதியாக அதே ரயிலில் ஏறி செல்வது போல கதையை முடித்திருந்தார். ரசிகர்களை கவர்ந்து இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது
இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘போற்றி பாடடிப் பெண்ணே’.. ‘இஞ்சி இடுப்பழகி’ போன்ற பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதற்கு முன் சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து சரியான வாய்ப்பில்லாமல் இருந்த வடிவேலுக்கு இந்த படத்தில் குணச்சித்திர வேடம். அவருக்கு சில காட்சிகளே என்றாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகத்தின் பாராட்டை பெற்றார். இந்த படத்தில் கமல், சிவாஜி கணேசன், நாசர் ஆகிய மூவரும் நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது.

தமிழ் சினிமாவில் தேவர் மகன் ஒரு முக்கிய படமாகவும், சிறந்த படமாகவும் இப்போது வரை பார்க்கப்படுகிறது. அந்த படத்திற்கு பின்னால் வந்த பல இளம் இயக்குனர்களுக்கு தேவர் மகன் ஒரு பாடமாக இருக்கிறது.இந்தப் படம் 1992 அக்டோபர் 25ம் தேதி வெளியானது. சரியாக இன்றோடு இப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகிவிட்டது.
’என் குழந்தைக்கு 33 வயதாகிறது.. இப்போது வரை அதை உயிரோடும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு நன்றி’ என பீல்ங்ஸ் காட்டியிருக்கிறார் கமல்.
