“முதல்வர் இதை செய்ய மறுத்துவிட்டார்”… குறை சொன்ன பிரபல இயக்குனர்… மேடையிலேயே பல்பு கொடுத்த கலைஞர்…

Published on: November 23, 2022
kalaignar and Sridhar
---Advertisement---

சிவந்த மண்

1969 ஆம் ஆண்டு சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், காஞ்சனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சிவந்த மண்”. இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீதேரே தயாரித்தும் இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Sivandha Mann
Sivandha Mann

எம்.ஜி.ஆருக்கு எழுதப்பட்ட கதை

1964 ஆம் ஆண்டு இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், எம்.ஜி.ஆரை வைத்து “அன்று சிந்திய ரத்தம்” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டப் பிறகு சில காரணங்களால் எம்.ஜி.ஆர் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது.

MGR
MGR

இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு “அன்று சிந்திய ரத்தம்” திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து, சிவாஜியை வைத்து “சிவந்த மண்” திரைப்படத்தை இயக்கினார் ஸ்ரீதர்.

கலைஞர் வசனம்

“சிவந்த மண்” திரைப்படத்தின் கதை எழுதப்பட்டபோது இத்திரைப்படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என ஸ்ரீதருக்கு தோன்றியது. ஆதலால் கலைஞரை அணுகி தனது விருப்பத்தை தெரிவித்தார் ஸ்ரீதர்.

Karunanidhi
Karunanidhi

கலைஞர் அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தார். ஆதலால் ஒரு முதல்வர், திரைப்படத்தில் பணியாற்றுவதில் எழும் சட்ட சிக்கலை குறித்து யோசித்தார். இதனை தொடர்ந்து கலைஞர் “எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். இதில் சட்ட சிக்கல் இருக்கிறதா? என ஆலோசித்துவிட்டு உங்களுக்கு கூறுகிறேன்” என பதில் அளித்தாராம். ஆனால் வெகு நாட்கள் ஆகியும் கலைஞரிடம் இருந்து பதில் வராததால் ஸ்ரீதரே வசனம் எழுதி இயக்கத் தொடங்கிவிட்டார்.

வெற்றி விழா

ஸ்ரீதரின் “சிவந்த மண்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீதர் “சிவந்த மண்” திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு முதல்வர் கலைஞர் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க: ரஜினியின் ஹிட் படத்திற்காக கமலுக்கு நன்றி சொன்ன இயக்குனர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

CV Sridhar
CV Sridhar

அந்த விழாவில் பேசிய ஸ்ரீதர் “சிவந்த மண் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதும்படி நான் கலைஞரிடம் கேட்டேன். முதலமைச்சராக இருப்பதால் அரசாங்கம் அனுமதிக்குமா என்று தெரியவில்லை என என்னிடம் அவர் சொன்னார். ஆதலால் அவர் என்னுடைய படத்திற்கு வசனம் எழுதமுடியாமல் போய்விட்டது.  கலைஞர் மட்டும் என்னுடைய திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தால் படம் இன்னும் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும்” என கூறினார்.

பல்பு கொடுத்த கலைஞர்

ஸ்ரீதர் பேசியதை தொடர்ந்து அவ்விழாவில் பேசத் தொடங்கிய கலைஞர் “சிவந்த மண் திரைப்படத்திற்காக வசனம் எழுதும்படி ஸ்ரீதர் என்னை கேட்டுக்கொண்டது உண்மைதான். முதலமைச்சராக இருந்துகொண்டு வசனம் எழுதுவதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா? என்பதை தெரிந்துகொண்டு உங்களிடம் பேசுவதாக அப்போது நான் சொன்னேன்.

Kalaignar
Kalaignar

அதன் பிறகு நான் வசனம் எழுதுவதால் சட்ட சிக்கல் எழுமா? என பலரிடமும் ஆலோசித்தேன். அவர்கள் ஒரு முதலமைச்சர் தாராளமாக கதை வசனம் எழுதலாம் என கூறி எனது சந்தேகத்தை தீர்த்தனர். ஆதலால் நான் வசனம் எழுதுவதற்கு தயாராகத்தான் இருந்தேன். ஆனால் ஸ்ரீதர்தான் அதன் பின் என்னை அழைக்கவில்லை” என்ற உண்மையை கூறினார்.  கலைஞர் இவ்வாறு கூறிய பிறகுதான் “நாம் இன்னும் ஒரு முறை கலைஞரை சந்தித்து வசனம் எழுதச்சொல்லி கேட்டிருக்கலாமே” என ஸ்ரீதருக்கு தோன்றியதாம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.