Categories: Cinema History Cinema News latest news

படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாக கோலிகுண்டு விளையாடிக்கொண்டிருந்த பிரபல இயக்குனர்… இதுக்கெல்லாம் பத்மினிதான் காரணமா??

1960 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மீண்ட சொர்க்கம்”. இத்திரைப்படத்தை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகி பத்மினி பல நாட்கள் படப்பிடிப்பிற்கு மிகவும் தாமதமாக வந்துகொண்டிருந்தாராம்.

Meenda Sorgam

அக்காலகட்டத்தில் பத்மினி எந்த படப்பிடிப்பாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாராம். ஆனால் “மீண்ட சொர்க்கம்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு மிகவும் தாமதமாக வந்துகொண்டிருந்தாராம். ஸ்ரீதர் தனது தயாரிப்பு நிர்வாகியின் மூலம் பத்மினிக்கு எவ்வளவோ சொல்லிப்பார்த்தாராம். ஆனாலும் பத்மினி படப்பிடிப்பிற்கு தாமதமாகவே வந்துகொண்டிருந்தாராம்.

Padmini

இந்த நிலையில் ஒரு நாள் பத்மினி 11 மணி ஆகியும் படப்பிடிப்புத் தளத்திற்கு வரவில்லையாம். அப்போது இயக்குனர் ஸ்ரீதர் தனது உதவியாளரிடம் சில கோலிகுண்டுகள் வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கிறார். உதவியாளர் கோலிகுண்டுகளை வாங்கிட்டு வர, ஸ்ரீதர், இணை இயக்குனர் சித்ராலயா கோபு, படத்தொகுப்பாளர் வின்சென்ட் ஆகிய அனைவரும் கோலிகுண்டு விளையாடத் தொடங்கினார்களாம்.

C.V.Sridhar

சரியாக 11.30 மணிக்கு பத்மினி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தாராம். ஸ்ரீதர் கோலிகுண்டு விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த பத்மினி நேராக அவரிடம் சென்று “ஸ்ரீதர் சார், நான் தயாராக இருக்கிறேன். நீங்க என்ன கோலி விளையாடிட்டு இருக்கீங்க” என கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர் “காலை 9 மணியில் இருந்து நாங்க காத்துட்டு இருக்கோம்மா. சும்மா இருக்க முடியாதுல. அதனால்தான் ஜாலியா விளையாடலாம்ன்னு கோலி விளையாடுனோம்” என்று கூறினாராம்.

இதையும் படிங்க: படம் பார்த்ததுனால வந்த கண்ணீர் இல்ல… படம் எடுத்ததுனால வந்த கண்ணீர்!! சோகத்தையே காமெடியாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்…

Padmini

ஸ்ரீதர் தன்னை குறிப்பிட்டுத்தான் இவ்வாறு கூறுகிறார் என்று பத்மினிக்கு புரிந்துவிட்டதாம். “என்னை மன்னிச்சிடுங்க. நாளையில் இருந்து நான் சரியான நேரத்துக்கு படப்பிடிப்பிற்கு வந்துவிடுகிறேன்” என்று கூறிய பத்மினி, அதன் பின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வரத்தொடங்கினாராம் .

Published by
Arun Prasad