மெரினா பீச்சில் சினிமா வாய்ப்பு வாங்கிய சரோஜா தேவி! - இப்படி ஒரு பிளாஸ்பேக்கா!.

saroja
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சரோஜா தேவி. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா உள்ளிட்ட பல படங்கள் எவர்க்ரீன் மனதை மயக்கும் படங்களாகும். அதேபோல், சிவாஜி, ஜெமினி ஆகியோருடனும் சரோஜா தேவி பல படங்களில் நடித்துள்ளார். பாலும் பழமும், புதிய புறவை, ஆலயமணி, பார்த்தால் பசி தீரும் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த படங்களாகும்.
புதிய பறவை படத்தில் சரோஜா தேவி பேசிய ‘கோபால்.. கோபால்’ வசனம் இப்போதும் சினிமாக்களிலும் காமெடி நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவைக்காக பலரும் பேசி வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ படத்திலும் சரோஜா தேவி நடித்திருந்தார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவரின் தாய் மொழி கன்னடம். ஆனாலும், தமிழை காற்றுகொண்டு சினிமாவில் பேசி நடித்தார். இவர் தமிழ் பேசி நடிக்கும் அழகே தனி.
இவரை சினிமாவில் நுழைந்த கதையை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். அப்போது பல படங்களுக்கு கதை எழுதும் கதாசிரியர் சின்ன அண்ணாமலை மெரினா கடற்கரைக்கு காத்து வாங்க சென்றார். அப்போது அங்கு இரு பெண்கள் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம். அவரை ஏற்கனவே தெரியும் என்பதால் அண்ணாமலை அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது அருகிலிருந்து பெண்ணை காட்டி ‘இவர் பெயர் ரமாதேவி.. கர்நாடகாவை சேர்ந்தவர். ஒரு கன்னட படத்த்தில் நடித்து வருகிறார். வாய்ப்பு கிடைத்தால் தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்’ என அவர் அண்ணாமலையிடம் அறிமுகம் செய்துள்ளார்.

anbe vaa
அப்போது பி.ஆர்.பந்துலு ‘தங்கமலை ரகசியம்’ என்கிற படத்தை இயக்கி வந்தார். எனவே, அவரிடம் ரமாதேவியை பற்றி அண்ணாமலை சொல்ல, அந்த படத்தில் அவரை ஒரு சின்ன வேடத்தில் பி.ஆர்.பந்துலு நடிக்க வைத்தார். அந்த படப்பிடிப்பில் ரமாதேவியை பார்த்த எம்.ஜி.ஆர் தான் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார். அந்த ரமாதேவிதான் சரோஜா தேவி. சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொண்டார்.
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி தமிழ் சினிமாவில் அறிமுகமானது இப்படித்தான்!...