அப்போ புருவத்துல தான்.. இப்போ மண்டை முழுக்க எவ்ளோ ரிங்கு.. மலேசியாவிலே செட்டிலான சிம்பு!

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடத்தி வரும் இசைக் கச்சேரிகளில் திடீரென இணைந்து நடிகர் சிம்பு பாடல்களை பாடியும் மேடையில் நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நீண்ட முடியுடன் புதிய லுக்கில் இருக்கும் நடிகர் சிம்பு தனது மண்டை மேல் உள்ள கொண்டை முழுவதும் ரிங்ஸ் அணிந்து இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் நடிகர் சிம்புவுக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்காக பெரும் உழைப்பை போட்டும் அந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

அதன் பின்னர், மணல் மாஃபியா டானாக சிம்பு ஏஜிஆர் எனும் பயங்கர பில்டப் கொண்ட கெட்டப்பில் நடித்த பத்து தல படம் பத்து நாட்கள் கூட சரியாக ஓடாமல் மண்ணைக் கவ்வியது. இதனால், அப்செட்டான நடிகர் சிம்பு அடுத்ததாக பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கமல் தயாரிப்பில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க கமீட் ஆகி உள்ளார்.

கமல் தயாரிப்பில் பெரிய படம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கதை வேண்டாம் என ரஜினிகாந்த் மறுத்து விட்ட நிலையில், அந்த கதையில் நடிக்க சிம்பு ஓகே சொல்லியதாகவும் அந்த கதையையே கமல் தயாரிப்பில் படமாக வரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள மலேசியா சென்ற நிலையில், தற்போது அங்கேயே செட்டில் ஆகி விட்டார் சிம்பு என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

யுவன் சங்கர் ராஜா கச்சேரியில் சிம்பு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியாவில் நடத்தி வரும் இசைக் கச்சேரியில் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டு பாடல்களை பாட அந்த கச்சேரி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து யுவன் நடத்தும் இசைக் கச்சேரியில் தானும் இணைந்துக் கொண்டு பாடல்களை பாடியும், நடனம் ஆடியும் ரசிகர்களை கவரப் போவதாகவும் சிம்பு தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தலையில் ஏகப்பட்ட ரிங்ஸ்

இந்நிலையில், மலேசியா கச்சேரிக்காக நடிகர் சிம்பு தனது தலை முழுக்க வளையங்களை மாட்டிக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் பாடல்களை பாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தம் படத்தில் நடிகர் சிம்பு புருவத்தில் மாட்டியிருக்கும் அந்த ஒத்த வளையமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது ஏகப்பட்ட ரிங்குகளை தலையில் மாட்டிக் கொண்டு சிம்பு திரியும் காட்சிகள் எத்தனை ரசிகர்களை இப்படி மாற்றப் போகிறதோ தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும், இப்படியே கச்சேரிகளில் நடிகர் சிம்பு பாடச் சென்று விட்டால், கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கப் போகும் அந்த பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க எப்போது சென்னைக்கு ரிட்டர்ன் ஆவார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

 

Related Articles

Next Story