திராணியும் தைரியமும் இல்ல!. எங்க அண்ணனை விட்டுடுங்க!. கங்குவா அப்டேட் கேட்டு பொங்கும் சூர்யா ரசிகர்கள்..
நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் காக்க காக்க, பிதாமகன் என டேக் ஆப் ஆனார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என ஆக்ஷன் படங்களில் நடித்து அடித்து ஆடினார்.
ஒருபக்கம் கவுதம் மேனன் இயக்கத்தில் காதல் ரசம் சொட்டும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களிலும் நடித்தார். இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டு. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
தனுஷை போல ஒரு பக்கம் நடிப்புக்கு தீனி போடும் சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்களிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். கடைசியாக 2022ம் வருடம் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இந்த படம் ஓடவில்லை. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் துவங்கப்பட்டது. இப்படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா சிலரோடு இணைந்து தயாரித்து வருகிறார். ஆனால், படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்னமும் இப்படம் வெளியாகவில்லை. ஒருபக்கம் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வாடிவாசல் படமும் இன்னமும் துவங்கப்படவில்லை. அதோடு, சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படமும், ஹிந்தியில் நடிப்பதாக இருந்த கர்ணா படமும் டிராப் ஆனது. இதனால் சூர்யா ரசிகர்கள் துவண்டு போனர்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் கங்குவா படத்தின் புரடெக்ஷன் மேனேஜர் தனஞ்செயன் ஆகியோரின் புகைப்படங்களை போட்டு ‘படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரியுங்கள். நீங்க உங்க நிறுவனத்தை வச்சி என்ன வேணா பண்ணுங்க. எங்க அண்ணனை விட்டுடுங்க’ என திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் போஸ்டர் அடித்து அப்பகுதியில் ஒட்டி வருகிறார்கள்.
அதோடு ‘கங்குவா ரிலீஸ் தேதி எப்போது வரும்? எங்களுக்கு கங்குவா அப்டேட் வேண்டும்’ என்றும் அந்த போஸ்டரில் எழுதி இருக்கிறார்கள். இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.