நடிகர் விஜய் 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்துவிட்டு 2 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே இருந்ததாக அவருடன் நடித்தவர்கள் சொல்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதில் இருந்த நிர்வாகிகள்தான் இப்போது தவெகவில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்கும்போது சரி.. அரசியலுக்கு வந்தபின்னரும் சரி… விஜய் பேட்டிகள் கொடுப்பதில்லை. அதோடு, அதிகம் பேசுவதும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் சக நடிகர், நடிகைகளிடம் பேசமாட்டார்.. அமைதியாகவே இருப்பார் என பலரும் கூறினார்கள். ஆனால், இந்த விமர்சனத்திற்கு விஜய் எப்போதும் பதில் சொன்னது இல்லை.
நடிகராக இருந்தபோதுதான் அப்படி என்றால் இப்போது அரசியல்வாதியான பின்னரும் விஜய் அதிகம் பேசாமல் இருக்கிறார். தவெக மாநாடு மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் மட்டுமே விஜய் பேசுகிறார். அதன்பின் சைலண்ட் மோடுக்கு போய்விடுகிறார். கரூர் சம்பவம், ஜனநாயகன் பட பிரச்சனை என எதற்கும் அவர் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில்தான் தேசிய ஊடகமான NDTV சேனலின் பத்திரிக்கையாளர்கள் நேற்று விஜயை தவெக பனையூர் அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அதேநேரம், அது வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. இதைப்பற்றிய செய்திகள் மட்டும் இன்று காலை வெளியானது.
இது தமிழக சினிமா மற்றும் அரசியல் ஊடகங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தனது திறமையால் வளர்ந்தவர் என்றாலும் அவரை பற்றிய செய்திகளை வெளியிட்டு அவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது தமிழக ஊடகங்கள்தான். அப்போதெல்லாம் தமிழக சினிமா பத்திரிக்கையாளர்கள் அவருக்கு தேவைப்பட்டார்கள்.
விஜய் அரசியல் செய்வது தமிழ்நாட்டில்.. அவர் முதல்வர் ஆக வேண்டும் என ஆசைப்படுவது தமிழ்நாட்டில்.. ஆனால், தமிழக ஊடகங்களுக்கும் பேட்டிகொடுக்காமல் ஒரு தேசிய ஊடகத்திற்கு மட்டும் பேட்டி கொடுத்திருக்கிறார் என அவர்கள் பொங்கி வருகிறார்கள்.



