ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக அடித்த கவிஞர் வாலி...! என்ன ஒரு புத்திசாலித்தனம்...?!!

Poet Vaali and Kamal
'வாலிபக் கவிஞர்' வாலி என்று அழைப்பார்கள். அவரது வயது உருவத்திற்கு தான். அவரது கவிதைகள் என்றுமே இளமைதான் என்று ஒரு முறை கவிஞர் வாலியை உலகநாயகன் கமல் வர்ணித்தார்.
அதனாலோ என்னவோ பத்திரிகைகள் இவரை வாலிபக் கவிஞர் வாலி என்று தான் பட்டம் கொடுத்து கவுரவித்து வருகின்றனர். இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் ரசிகர்கள் ரசிக்கும் அளவு கவிதை எழுதியவர் வாலி.

Vaali
அவர் கமல் படமான ஹேராமில் கமல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில காட்சிகளில் நடித்துள்ளார். ரஜினி, கமல் படங்களில்; அவரது பாடல்களை உற்று நோக்கினால் நமக்குப் பல விஷயங்கள் புலப்படும். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் ரஜினி நடித்த தளபதி படத்திற்கு வருவோம். இந்தப் படத்தில் சின்னத்தாயவள் தந்த ராசாவே...என்ற பாடலைக் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.

Thalapathi
படத்தின் கதைப்படி 14 வயதே அன கல்யாணி தாயாகி விடுகிறாள். வேறு வழியின்றி கனத்த இதயத்துடன் ட்ரெயின்ல பிறந்த குழந்தையை ஏற்றி அனுப்பி விடுகிறாள்.
சின்னத்தாயவள் என்ற பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைக்க, ஜானகி பாடுகிறார்.
இந்தப்பாடலை எழுதிய வாலியின் வார்த்தை விளையாட்டைக் கொஞ்சம் கவனிங்க...
பாடலின் முதல் வரியில், சின்னத்தாயவள் தந்த ராசாவே....என்று வரும். இந்த வரியைக் கேட்டதுமே நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது 14 வயதே ஆன தாய் ஒருவள் பெற்றெடுத்த ராசா தான் ஹீரோ ரஜினி.
ஆனால் இந்த வரிகளில் இன்னொரு அர்த்தமும் நமக்குத் தென்படும். அதாவது இளையராஜாவின் தாய் பெயர் சின்னத்தாய். இப்போ மீண்டும் அந்தப் பாடலின் முதல் வரியைப் படிச்சிப் பாருங்க...வாலி என்ன சொல்ல வருகிறார் என்று தெரியும்.
சின்னத்தாயவள் தந்த ராசாவே...என்றால் இளையராஜா...வையும் இந்தப் பாட்டில் குறிப்பிடுகிறார். என்ன ஒரு புத்திசாலித்தனம்...?!
அதே போல கமல் படமான தசாவதாரம் படத்தை நாம் எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் முதல் பாடலாக வரும் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது என்ற பாடலில் பின்வரும் வரிகள் வரும்.
ராஜலெட்சுமி நாயகன், ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய், இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்.
இந்தப் பாடலில் என்ன சொல்ல வருகிறார் என்றால், கமல் கேரக்டரின் பெயர் படத்தில் ரங்கராஜன் நம்பி.
பாடலுக்கு அப்படியே பொருள் கொண்டால் இவ்வாறு வரும். அதாவது, பொன்னும் பொருளும் அள்ளித்தரும் லட்சுமி தேவியின் நாயகன், கணவர் பெருமாளாகிய ஸ்ரீனிவாசன். ரங்கராஜன் நம்பி, விஷ்ணு பக்தன், விஷ்ணு தாசன் என்றும் நாட்டில் ஆயிரம் ராஜாக்கள் உள்ளனர். இருந்தாலும், அவர்களை விட ரங்கராஜன் தான் ராஜாக்களுக்கு எல்லாம் ராஜா என்று எழுதியிருப்பார்.
இதைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் இன்னொரு பொருளும் தென்படும். அதுதான் வாலியின் வார்த்தை விளையாட்டு. படித்தால் அசந்து போவீர்கள்.

Dasavatharam
கமலின் தந்தை பெயர் ஸ்ரீனிவாசன். தாயின் பெயர் ராஜலெட்சுமி.
இப்போது முதல் 2 வரிகளைப் படித்துப் பாருங்கள். அதாவது,
ராஜலெட்சுமி நாயகன், ஸ்ரீனிவாசன் தான்.
ஸ்ரீனிவாசன் சேய், இந்த விஷ்ணு தாசன் நான்...
இந்த வரிகளில் வரும் விஷ்ணு தாசன் தான் கமல். அவரது பெற்றோரின் பெயர்கள் முதல் வரியில் உள்ளன.
அடுத்த வரிகளைப் பாருங்கள்.
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்.
கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்...அட அட..! எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ?!