பாசமலர் வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு: சிவாஜி - சாவித்ரி நடிப்பில் உருவான காவியம்
தமிழ் திரையுலகின் எவர்கிரீன் பாசமலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1961-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான இத்திரைப்படம், அண்ணன் - தங்கை பாசத்திற்கு இலக்கணமாக இன்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலை கழகம் சிவாஜியும், பெண் சிவாஜி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாவித்திரியும் இணைந்து நடித்த படம் பாசமலர். ஏ.பீம்சிங் இயக்கிய அந்த படத்தில் ராஜசேகரன் - ராதா என்ர கதாபாத்திரத்தில் அண்ண தங்கையாக வாழ்ந்திருப்பர்கள் சிவாஜிய்ஜ்ம் சாவித்திரியும்.இவர்களுடன் ஜெமினி கணேசன், எம்.என். ராஜம் ஆகியோரின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும் மிகப்பெரிய பலமாக இருந்தது. மலர்ந்தும் மலராத பாதியைப் போல , எங்களுக்கும் காலம் வரும் , பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் மற்றும் வாராய் என் தோழி வாராயோ போன்ற பாடல்கள் இன்றும் வானொலிகளிலும் சரி வீடு விசேசங்களிலும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கண்ணதாசனின் வரிகள் அண்ணன்-தங்கை உறவின் ஆழத்தை அற்புதமாக உணர்த்தின.
1961ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வெளியான இத்திரைப்படம் அக்காலத்திலேயே திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி இப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இன்றும் அண்ணன் - தங்கை பாசம் என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் படம்தான்.

65 ஆண்டுகள் கடந்த பின்னரும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்திலும், கதையாலும் அழுத்தமான நடிப்பாலும் மக்களைக் கட்டிப்போட முடியும் என்பதற்கு பாசமலர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். இப்படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.
