4 பிரபல இயக்குநர்களோட 2-வது படம் ஓடாமல் போனதால் தனது 'ரன்' கண்டிப்பாக ஜெயிக்கணும்ன்னு நினைத்த லிங்குசாமி!
சூப்பர் ஹிட்டான முதல் படத்தை கொடுத்தது மட்டுமின்றி, இரண்டாவது படத்திலும் தான் ஒரு சிறந்த இயக்குநர் தான் என்று நிரூபித்து காட்டியவர் தான் லிங்குசாமி.
இவரது முதல் இரண்டு படங்களான 'ஆனந்தம், ரன்' ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதில் 'ரன்' படத்தை வருகிற ஜூலை 10-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணியிருக்கிறார் லிங்குசாமி.
இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்திருந்தனர். சமீபத்தில், லிங்குசாமி கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "கமல் சாரோட 'அபூர்வ சகோதரர்கள்' படத்துல ஒரு வசனம் வரும், சர்க்கஸ் துப்பாக்கி முன்னாடியும் சுடும், பின்னாடியும் சுடும்ன்னு. அந்த மாதிரி தான் ஒரு டைரக்டரோட படம் இருக்கணும்.
'ஆனந்தம்' வந்து ஒரு குடும்ப படமா பண்ணிட்டனால, அதே மாதிரி தான் அடுத்த படமும் இந்த டைரக்டர் பண்ணுவாருன்னு நினைக்க கூடாதுன்னு தான் ரெண்டாவது 'ரன்' படம் பண்ணேன். இன்னொரு விஷயம் என்னன்னா, அந்த டைம்ல ரொம்ப ஃபேமஸான இயக்குநர்களா இருந்த பார்த்திபன் சார், கதிர் சார், விக்ரமன் சார், வஸந்த் சார் இவங்களோட முதல் படம் பெருசா ஜெயிச்சிருக்கு.

ஆனா, இவங்களோட ரெண்டாவது படம் பெருசா ஓடாம போயிருக்கு. அதுனால, என்னோட ரெண்டாவது படமான 'ரன்' கண்டிப்பா ஓடிடணும்ன்னு நினைச்சேன். என் வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவத்தை மையமா வச்சு ஒரே வாரத்துல இந்த கதைய டெவலப் பண்ணிட்டேன்.
க்ளைமேக்ஸ்ல மட்டும் ஹீரோ, ஹீரோயின் சாகாம பாசிட்டிவ்வா முடிக்கணும்ன்னு நினைச்சேன். ஒரு 75 நாள் இந்த படம் தியேட்டர்ல ஓடி, ரெண்டாவது படத்துல லிங்குசாமி ஜெயிச்சிட்டாருன்னு சொன்னா போதும்ன்னு தான் நினைச்சேன். ஆனா, ரசிகர்கள் வந்து வேற லெவல் ஹிட்டாக்கிட்டாங்க" என்று கூறியுள்ளார்.
