பாராட்டு, விமர்சனம் ரெண்டையும் லாவகமாகக் கையாண்டவர் ஜன நாயகன் வினோத்!
ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் ஹெச்.வினோத். 'சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய ஐந்து படங்களுக்கு பிறகு வினோத் இயக்கியுள்ள ஆறாவது படம் தான் 'ஜன நாயகன்'.
இதில் கதாநாயகனாக நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹெச்.வினோத் குறித்து அவரது நண்பரும், 'கத்துக்குட்டி, உடன்பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இயக்குநருமான இரா.சரவணன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "'தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரிலீஸான நாள். இயக்குநர் ஹெச்.வினோத்தும் நானும் கடற்கரையோரம் அமர்ந்திருந்தோம்.

ஒரே வாழ்த்து மழை. அடித்துக்கொண்டே இருந்தது அவர் போன். எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் இயற்கை, மரம், மழை எனப் பிரசங்கம் பேசிக் கொண்டிருந்தார் வினோத். தீரனைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இரவு நெடுநேரம் ஆனதால், கடற்கரையோரம் காவல் துறை வாகனம் வந்தது.
யார் என அதட்டியவர்கள் தீரன் பட இயக்குநர் எனத் தெரிந்து கைகுலுக்கினார்கள். போலீஸ் பட்ற சிரமங்களை அழுத்தமா சொல்லி இருக்கீங்கன்னு பேசுறாங்க சார்... என்றார்கள். அப்போதும் படம் குறித்தோ கதை குறித்தோ வினோத் எதுவும் பேசவில்லை.
அஜீத்குமாரின் ‘வலிமை’ ரிலீஸான நேரம். அதேபோல் வினோத்துடன் அமர்ந்திருந்தேன். மாற்று விமர்சனங்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தன. அப்போதும் இன்றைய அரசியல், இயற்கை, மரங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தார் வினோத். பாராட்டு, விமர்சனம் என எதையும் இவ்வளவு லாவகமாகக் கையாண்ட ஒருவரை இதுவரை நான் பார்த்ததில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
