"'ஜன நாயகன்' இயக்குநர் ஹெச்.வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி" - 'நந்தன்' இரா.சரவணன்!
சினிமாவில் படிப்படியாக முன்னேறி சாதிப்பவர்கள் பலருக்கு முன் உதாரணமாக இருப்பார்கள். இந்த வகையைச் சேர்ந்த ஒரு சினிமா இயக்குநர் தான் ஹெச்.வினோத்.
முதலில் சின்ன பட்ஜெட்டில் நட்டியை வைத்து 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை எடுத்து யார் இந்த இயக்குநர்? என ஆச்சர்யப்பட வைத்தார். பின், கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை கொடுத்து தான் ஒரு தரமான இயக்குநர் என்று நிரூபித்தார்.
அதன் பிறகு டாப் ஹீரோவான அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' என மூன்று படங்களை பண்ணிவிட்டு, இப்போது முன்னணி நடிகரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யை வைத்து 'ஜன நாயகன்' படத்தை எடுத்திருக்கிறார். விஜய்யின் கடைசி படமான இது நேற்று முன் தினம் (ஜூலை 23) தான் ரிலீஸ் ஆனது.

இயக்குநர் ஹெச்.வினோத்தின் நெருங்கிய நண்பரும், சசிகுமாரின் 'நந்தன்' பட இயக்குநருமான இரா.சரவணன் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "வினோத் என்கிற அரக்கன்! அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம்.
நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத்.

“யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார். “படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?”. “ஊத்தட்டும் விடுய்யா…” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார். "ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க...” என்றேன்.
“சரிய்யா…” - எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார். “நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வன்" என்று பதிவிட்டிருந்தார்.
