அப்பவே பேண்ட் வாத்தியம் முழங்க படப்பெட்டி ஊர்வலம்… அட அதுதான் அச்சாரம் போட்ட படமா?!

 
அப்பவே பேண்ட் வாத்தியம் முழங்க படப்பெட்டி ஊர்வலம்… அட அதுதான் அச்சாரம் போட்ட படமா?!

ரசிகர்கள் இப்போது தங்கள் அபிமான நாயகனின் படம் ரிலீஸ் ஆனால் அந்த திரையரங்குகளில் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். சிலர் படங்களில் நாயகன் கெட்டப் மாதிரியே தன்னை உருமாற்றிக் கொண்டு வந்து அசத்துகிறார்கள். படப்பிரிண்ட் வந்ததும் அதை ஊர்வலமாக எடுத்து வந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் விதை யார் போட்டது? வாங்க பார்க்கலாம்.

1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன்ல அப்படி ஒரு கூட்டம். அந்த ஜனத்திரளைப் பார்த்து காந்திஜி தான் வர்றாரு போலன்னு பலரும் நினைத்தார்கள். ஆனால் அன்று கூடிய கூட்டம் எந்த ஒரு பிரமுகரையும் வரவேற்பதற்கு அல்ல. ஒரு திரைப்படத்தின் திரைப்படச் சுருளை வரவேற்பதற்கு.

தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படப்பெட்டி வந்தது. 31ம் தேதி கினிமா சென்ட்ரல் என்ற தியேட்டரில் திரையிடப்படுவதாக இருந்தது. அதற்காக காளிதாஸ் படப்பெட்டி அங்கு வந்து இறங்கிய உடனே ரசிகர்கள் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த பிலிம் சுருளை ரசிகர்கள் தலைமேல் வைத்துக்கொண்டு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.

இன்றைக்குப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களின் பிரிண்டை எல்லாம் ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்துப் போகிறார்கள். அதற்கெல்லாம் விதைப்போட்டது என்றால் அது 1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று வெளியான காளிதாஸ் படம்தான் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

From Around the web